பதிவு செய்த நாள்
20
ஜூலை
2017
06:07
ஆத்துார்: கல்வராயன் மலை, பெரியகுட்டிமடுவு கிராமத்தில், சோழர் கால நடு கற்கள் இரண்டு கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.தமிழக தொல்லியல் துறை, ஓய்வு பெற்ற இணை இயக்குனர் பூங்குன்றன், சேலம் வரலாற்று ஆய்வு மைய ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன், பொன்.வெங்கடேசன், பெருமாள், பொன்னம்பலம் உள்ளிட்ட குழுவினர், வாழப்பாடி அருகே, புழுதிக்குட்டை ஊராட்சி, பெரியகுட்டிமடுவு கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டனர்.
ஏரிக்காடு பகுதியை சேர்ந்த பொன்னுசாமியின் நிலத்தில், 11 மற்றும், 12ம் நூற்றாண்டை சேர்ந்த இரண்டு சோழர் கால நடுகற்கள் கண்டு பிடித்தனர். 11ம் நூற்றாண்டு நடுகல்லில் மட்டும் எழுத்துகள் உள்ளன. இதுகுறித்து, வரலாற்று ஆய்வாளர்கள், நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த, 11ம் நூற்றாண்டை சேர்ந்த ஒரு நடுகல், இரண்டு அடி உயரம், ஒன்றரை அடி அகலத்தில், திரிபங்க நிலையில் சிற்பம் உள்ளது. தலையின் கொண்டை நேராக உள்ளது. இவன் உடலில் கழுத்து, மார்பு, வயிறு, தொடை, கணுக்காலுக்கு சற்று மேலே ஐந்து இடங்களில் அம்பு பாய்ந்துள்ளதை துல்லியமாக சிற்பத்தில் காட்டியுள்ளனர். இவன் வீரம் மிக்கவனாகவும் முக்கிய தளபதியாகவும் இருந்திருக்கலாம். ஒரே நேரத்தில் பலர் இவனை மையப்படுத்தி சூழ்ந்து தாக்கியதால், பல இடங்களில் அம்பு பாய்ந்துள்ளது. இவன் வலது கையில் வாளும், இடது கையில் வில்லுடன் கூடிய அம்பும் உள்ளன. அழகான இடை ஆடையும் கழுத்தணியும் காணமுடிகிறது. 27 வரிகளில் எழுத்துக்களில், மூன்று வரிகள் படிக்க முடியாத அளவுக்கு சிதைந்துள்ளது.
கல்வெட்டு சொல்லும் தகவல்: மலையகுல சந்திராதித்த பேரரையன் என்ற தலைவன் காலத்தி,ல் ஒரு வீரன் தன்னுடைய பகுதியை பாதுகாக்க எதிரிகளுடன் போரிட்டு இறந்த செய்தியை இந்த கல்வெட்டு கூறுகிறது. மலையகுலம் என்பது சங்க காலம் முதலே, திருக்கோவிலுாரை தலைநகராக கொண்டு ஆண்ட மலையமான்களை குறிப்பதாகும். சோழர்கள் காலத்தில், மலையகுலராயர்கள் என்று அழைக்கப்பட்டனர். சந்திராதித்த பேரரையன் என்ற சொல் மிக முக்கியமான ஒன்றாகும். தமிழகத்தில், சூரிய குலம், சந்திர குலம் என்ற இரண்டு பிரிவுகளாக, அரசர்கள் இருந்தனர். கல்வெட்டில் வரும் சந்திராதித்த பேரரையன் என்பது, சூரிய குலத்தையும், சந்திர குலத்தையும் இணைத்து, ஒரு புதிய குலமாக உருவாகி இருக்கலாம். அதற்கு சான்றான இந்த கல்வெட்டு தமிழக வரலாற்றுக்கு முக்கியமான ஒன்றாகும். ஈச்சம்பாடி, பரித்தியூர் என்ற ஊரின் பெயர்கள் உள்ளன. இந்த ஊர்கள், தர்மபுரி மாவட்டம், அரூர் தாலுகாவில் இதே பெயரில் உள்ளது. மாவூர் என்ற ஊர் வரை சென்று, இவர்கள் போர் செய்துள்ளனர். இதில், கணியன் என்பவனின் மகன் சேனான் என்ற வீரன் இறந்துள்ளான். அவனுக்காக நடுகல் வைக்கப்பட்டுள்ளது.
12ம் நூற்றாண்டு நடுகல்: சேனான் நடுகல்லுக்கு அருகில் உள்ள, 12ம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் கால நடுகல்லில் எழுத்துகள் இல்லை. வீரனின் தலையின் வலது புறம் கொண்டை உள்ளது. வலது கையில் சிறிய வாள் மற்றும் இடது கையில் வில் அம்புடன் இணைந்து உள்ளது. போருக்கு தயாராக செல்லும் வீரன், காதணிகளும், இடை ஆடையும் காணப்படுகிறது. இடுப்பில் ஒரு அம்பு பாய்ந்த நிலையில் உள்ளது. இடுப்பின் ஒருபுறம் சிறிய வாள் உள்ளது. இங்கு நடந்த போரில் இவன் எதிரிகளை கொன்று, இவனும் வீரமரணம் அடைந்துள்ளான். இவனுக்காக வைக்கப்பட்ட நடுகல் இது. இப்பகுதியில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டால் பல்வேறு வரலாற்று தகவல்கள் கிடைக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.