தேவிபட்டினம்: தேவிபட்டினம் நவபாஷாணத்தில் நாளை மறுநாள் ஆடி அமாவாசை தினத்தில் பக்தர்கள் பாதுகாப்பாக புனித நீராடும் வகையில் இந்து அறநிலையத்துறை சார்பில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. தேவிபட்டினம் நவபாஷாணத்தில் திருமண தடை, ஏவல், தர்ப்பணம், குழந்தை பாக்கியம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு பரிகார பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன. இங்கு செய்யப்படும் பரிகார பூஜைகளுக்கு தீர்வு கிடைப்பதாக பக்தர்கள் நம்புவதால் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆடி, தை அமாவாசை தினங்களில் ஆண்டு தோறும் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இங்கு வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதால் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கும் நிலை உள்ளது. இந்நிலையில் நாளை மறுநாள் ( ஜூலை 23) ல் ஆடி அமாவாசை தினம் என்பதால் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் செய்ய வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களை கட்டுப்படுத்தும் விதமாக இந்து அறநிலையத்துறை சார்பில் கம்புகள் மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.