பதிவு செய்த நாள்
22
ஜூலை
2017
11:07
வத்திராயிருப்பு: சதுரகிரி மலையில் நடக்கும் ஆடி அமாவாசை விழாவை காண பக்தர்கள் குவியத் துவங்கியுள்ளனர். விழா நாட்கள் குறைக்கப்பட்டதாலும் இன்றும், நாளையும் வாரவிடுமுறை நாளாக இருப்பதாலும் பக்தர்கள் லட்சக்கணக்கில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சதுரகிரி மலையில் ஆடி அமாவாசை விழா நேற்று மாலை பிரதோஷ வழிபாட்டுடன் துவங்கியது. நேற்று முன்தினம் முதல் மலைப்பாதை திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். நேற்று நடந்த பிரதோஷ வழிபாட்டை காண அதிகாலை 5:00 மணி முதல் பக்தர்கள் மலையை நோக்கி வரத் துவங்கினர்.மலைப்பாதையின் நுழைவு வாயிலில் பக்தர்களின் உடைமைகள் சோதனையிடப்பட்டு பாலிதீன் பைகள், பீடி, சிகரெட், புகையிலை பொருட்கள், தீப்பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கொளுத்திய வெயில் : நேற்று மலையில் கடும் வெயில் அடித்தது. ஆனாலும் பக்தர்கள் செடி, கொடி, மரங்களின் நடுவே இளைப்பாறி மலை ஏறினர். மாலை 4:00 மணிக்கு பிரதோஷ வழிபாடு துவங்கியது. சுந்தரமகாலிங்கசுவாமி கோயிலில் பிரதோஷம் முடிந்து சங்கொலி முழங்கியவுடன், சந்தனமகாலிங்கசுவாமி கோயிலிலும், சுந்தரமூர்த்தி சுவாமி கோயிலிலும் மூலவர்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
சிவராத்திரி வழிபாடு : இன்று முக்கிய நிகழ்ச்சியான சிவராத்திரி வழிபாடு, மாலை 6:00 மணிக்கு துவங்குகிறது. இன்றும், நாளையும் விடுமுறை என்பதாலும், திருவிழா ஆறு நாட்களாக குறைக்கப்பட்டதாலும் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த, 15 நிமிடத்திற்கு ஒருமுறை 500 பேர் வீதம் பிரித்து அனுப்ப முடிவு செய்துள்ளனர்.
சபாஷ் வனத்துறை:
* பக்தர்கள் கொண்டு செல்லும் உடமைகளை தொண்டு நிறுவனத்தினர் உதவியுடன் சோதனை செய்த வனத்துறையினர் ஒரு சிறு துறும்பைக்கூட விடவில்லை. குளிர்பான பாட்டில்களில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர்களைகூட கிழித்து எடுத்தே அனுப்பினர்.
* இதேபோல் சுமைதுாக்கிகள் கொண்டு செல்லும் தலைச்சுமையை கடுமையாக சோதனை செய்ததோடு, அன்னதான மடங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட அழுகிய, கெட்டுப்போன காய்கறிகளை கண்டறிந்து அந்த மூட்டைகளை கொண்டு செல்ல தடை விதித்தனர்.
* எதிர்பார்த்தபடியே மலையில் பக்தர்கள் தண்ணீர் பிரச்னையால் மிகவும் சிரமப்பட்டனர். கழிப்பறைகளுக்கு தண்ணீர் இல்லாமல் பக்தர்கள் திறந்த வெளியை பயன்படுத்தியதால் மலைப்பாதையில் துார்நாற்றம் வீசியது.
* ’தண்ணீர் வசதியில்லாததால் மலையில் பக்தர்கள் தங்கி சிரமப்பட வேண்டாம்’
என போலீசார் தொடர்ந்து ஒலிபெருக்கியில் அறிவுறுத்துவதோடு, பெரும்பாலான பக்தர்களை மலையில் தங்கவிடாமல் கீழே அனுப்புகின்றனர்.
* பக்தர்களின் வாகனங்கள் அடிவாரத்திற்கு 7 கி.மீ., க்கு முன்பாகவே தடுத்து நிறுத்தப்படுகின்றன.
* மலை அடிவாரத்தில் எஸ்.பி., ராஜராஜன் தலைமையில் 1100 போலீசாரும், மலையில் மதுரை மாவட்ட போலீசார் 600 பேரும் குவிக்கப்பட்டுள்ளனர்.