ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் ஆடித் திருக்கல்யாண விழா ஜூலை 17ல் துவங்கியது. ஜூலை 28ல் ஆடித் திருக்கல்யாணம் நடக்கிறது. இதில் ஜூலை 27 ல் கோயிலில் நள்ளிரவு 2:00 மணிக்கு நடை திறந்து 3:00 முதல் அதிகாலை 4:00 மணி வரை ஸ்படிக லிங்க பூஜை நடக்கிறது. இதனை தொடர்ந்து கால பூஜை முடிந்ததும், பர்வதவர்த்தினி அம்மன் வெள்ளி கமல வாகனத்தில் தபசு மண்டபத்தில் புறப்பாடானதும், கோயில் நடை சாத்தப்படும். மதியம் 12:00 மணிக்கு சுவாமி தங்க ரிஷப வாகனத்தில் புறப்பாடாகி தபசு மண்டபத்திற்கு சென்றதும் , மாலை 4:00 மணிக்குள் மாலை மாற்று நிகழ்ச்சி நடக்கும். பின் மாலை 5:00 மணிக்கு சுவாமி, அம்மன் கோயிலுக்கு திரும்பியதும் நடை திறக்கப்படும். மேலும் ஆக.,2 ல் கோயிலில் இரவு 3:00 மணி முதல் ஸ்படிகலிங்க பூஜை நடக்கும். பின் கால பூஜை முடிந்ததும் காலை 6:00 மணிக்கு தங்க கேடயத்தில் சுவாமி, அம்மன் கெந்தமாதன பர்வதம் மண்டகப்படிக்கு புறப்பாடாகியதும், கோயில் நடை அடைக்கப்படும். பின் இரவு 10:00 மணிக்கு சுவாமி, அம்மன் கோயிலுக்கு திரும்பியதும் நடை திறக்கப்படும். எனவே ஜூலை 27, ஆக.,2ல் பக்தர்கள் கோயிலில் நீராடவும், பகலில் தரிசனம் செய்வதை தவிர்க்கவும், என கோயில் இணை ஆணையர் மங்கயைர்க் கரசி தெரிவித்தார்.