பதிவு செய்த நாள்
22
ஜூலை
2017
11:07
பழநி, பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் ஆடிவெள்ளி, லட்சார்ச்சனை விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து நுாறாயிரம் மலர்கள் துாவி அர்ச்சனை செய்யப்பட்டது. பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் ஜூலை 17 முதல் ஆக.,10 வரை தினசரி மாலை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, நுாறாயிரம் மலர்கள் துாவி லட்சார்ச்சனை பூஜைகள் நடக்கிறது. ஆக., 11ல் ஆடி லட்சார்ச்சனை வேள்வி நடக்க உள்ளது.
நேற்று முதல் ஆடிவெள்ளியை முன்னிட்டு காலை 7:00 மணிக்கு பெரிய நாயகியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. மாலை 6:30 மணிக்கு மேல் முத்தங்கி அலங்காரம் செய்து லட்சார்ச்சனை நடந்தது.
திருஆவினன்குடி கோயில் துர்கையம்மன் தெற்குகிரிவீதி காளிகாம்பாள் கோயில், வனதுர்க்கை, மகிஷாசூரமர்த்தினி, லட்சுமிபுரம் மகாலட்சுமி, நேதாஜிநகர் காமாட்சி ஏகாம்பரேஸ்வரர் கோயில் சிறப்பு அலங்காரம், பக்தர்களுக்கு கூழ் பிரசாதம் வழங்கப்பட்டது. வேடசந்துார்: வேடசந்துார் அய்யனார் கோயிலில் துர்க்கையம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. 16 வகையான அபிஷேகங்களை தொடர்ந்து அன்னதானம் நடந்தது.
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு பால், சந்தனம், இளநீர், பன்னீர், தயிர், தேன், திருமஞ்சனம் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடந்தன. மலர் அலங்காரத்தில் எழுந்தருளியஅம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது.
சின்னாளபட்டி: சின்னாளபட்டி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் கூழ்கலயங்களுடன், பக்தர்களின் ஊர்வலம் நடந்தது. நாகர் சன்னதி வழிபாட்டை தொடர்ந்து, கருவறைக்கு கலயங்கள் அழைப்பு நடந்தது. சிறப்பு அபிஷேகம் செய்து, தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்களுக்கு கூழ் பிரசாதம் வழங்கப்பட்டது. தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில், திருமஞ்சன அபிஷேகம் நடந்தது. விசேஷ மலர் அலங்காரத்துடன், வாலை, திரிபுரை சக்தி அம்மனுக்கு ஆராதனைகள் நடந்தது.