பதிவு செய்த நாள்
22
ஜூலை
2017
12:07
தர்மபுரி: ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள, அம்மன் கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடந்தன. ஆடி மாதத்தின் வெள்ளிக்கிழமைகளில், அம்மன் கோவில்களில் பக்தர்கள் அதிகளவில் திரண்டு, அம்மனை வழிபடுவது வழக்கம். ஆடிமாத முதல் வெள்ளிக்கிழமையான நேற்று, தர்மபுரி செந்தில்நகர் முத்துமாரியம்மன் புற்றுகோவிலில், திரளான பெண் பக்தர்கள் பங்கேற்றனர். மேலும், புற்றில் பால் மற்றும் முட்டைகளை ஊற்றி, புற்றை சுற்றி வலம் வந்து முத்துமாரியம்மனை வழிபட்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். இதேபோல், நெசவாளர்காலனி சவுடாம்பிக்கை மற்றும் சக்திமாரியம்மன் கோவில், கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் கோவில், வெள்ளிபேட்டைதெரு அங்காளம்மன் கோவில், எஸ்.வி., ரோடு, அங்காளம்மன் கோவில், கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், அப்பாவுநகர் ஓம்சக்தி அம்மன் கோவில் உள்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில், ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரங்கள் நடந்தன.