பதிவு செய்த நாள்
23
நவ
2011
12:11
1. ஐயப்ப பக்தர்கள் விரதம் இருக்கும் சமயத்தில் உறுதியான கம்பியில் கட்டிய ஒரு மாலையே போதுமானது. துணை மாலை அவசியமே இல்லை.
2. முறையாக விரதம் இருந்தால் தங்களது மனசாட்சி அனுமதிக்கும் பட்சத்தில் மாலை போடாமல் 41 நாட்கள் விரதமிருந்து புறப்படும் நாளன்று மாலை போடுவதில் தவறேதும் இல்லை.
3. சென்ற தடவை உபயோகித்த மாலையை அது உறுதியாய் இருக்கும் பட்சத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம்.
4. சபரிமலை தரிசனம் செய்தபிறகு, வழியிலேயே மாலையைக் கழற்றாமல் வீட்டுக்குத் திரும்பிய பிறகு மாலையைக் கழற்றுவது முழுமையான, முறையான, உத்தமமான செயலாகும்.
5. மாலையை ஏதாவது ஒரு கோயிலில் கழற்ற இயலாத பட்சத்தில் அம்மாவைக் கொண்டு கழற்றலாம்.
6. மாலை போட்டுக் கொண்டே தகப்பனாருக்கு சிரார்த்தம் (திதி) செய்யலாம்.
7. மாலைபோட்டு விரதம் இருக்கும்போது, மனைவிக்குக் குழந்தை பிறப்பதென்பது சுபகாரியமே. மாலையைக் கழட்ட வேண்டாம். குழந்தை பிறந்து 6 நாட்கள் கழித்து, புண்ணியாதானம் முடிந்து குழந்தையைப் பார்க்கலாம். பிரசவ சமயத்தில் தாங்கள் உடன் இருக்கவேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருந்தாலும், குழந்தையை உடனே பார்க்கவேண்டும் என்ற கடமை உணர்வு இருக்கும் பட்சத்தில் மாலையைக் கழற்றலாம். மாலை போட்டிருக்கும் போது கருவுற்றிருப்பது சுபகாரியமே! எனவே, மாலை போடலாம்.
8. நாற்பத்தோரு நாட்கள் முறையாக விரதம் இருந்து பயணத்தை மேற்கொள்வதே, போற்றத்தக்க உத்தமமான செயலாகும்.
9. சபரிமலை பயணத்தில் மிதியடி அணிந்துகொள்வது என்பது தங்கள் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு தகுந்த முடிவு எடுக்கலாம். அணிவது தவறில்லை.
10. ஒருமுறை உபயோகித்த இருமுடிப்பையை மறுமுறை உபயோகிக்கலாம். அத்துடன் இன்னொருவர் உபயோகித்த இருமுடிப்பையை அது சுத்தமாக இருக்கும் பட்சத்தில் உபயோகிக்கலாம்.
11. முதல் வருடம் மலைக்குச் செல்லும் ஐயப்பமார்கள், கன்னிபூஜையை அவசியம் செய்யவேண்டும் என்கிறார்கள். வசதியில்லாத பட்சத்தில் கடன் வாங்கியாவது கன்னிபூஜையை செய்ய வேண்டும் என்பது அவசியம் இல்லை. ஐயப்பன் அத்தகைய ஆடம்பரத்தை விரும்புவதும் இல்லை. தங்களால் எப்போது எவ்வளவு முடியுமோ, எப்போது இயலுமோ, வீட்டிலேயே உணவைப் பொட்டலமாகக் கட்டிக்கொண்டு, சாலையோரத்தில்உள்ள மிகவும் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களால் இயன்றவரை அளிக்கலாம்.
12. தொழிற்சாலையில் வேலை செய்யும் போது கடமையைச் சரிவர செய்யும்பொருட்டு ஷு அணியலாம். இதில் குற்றம் ஏதும் இல்லை.
13. விரத காலத்தில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டாம். மற்றபடி சாதாரணமாக சிகைக்காய், சோப்பு உபயோகிப்பதில் தவறில்லை.
14. மாலை போட்டுக் கொண்டு விரதம் இருக்கும் சமயத்தில், வீட்டிலுள்ளவர்களுக்கு அம்மை கண்டிருந்தால் அதே வீட்டில் இருக்கும் பட்சத்தில் மாலையைக் கழட்டுவது உத்தமம்! ஆனால், தாங்கள் வெளியே எங்கும் தங்கியிருந்தால் மாலையைக் கழட்டவேண்டிய அவசியமில்லை.