சதுரகிரியில் நிறைவுபெற்றது ஆடி அமாவாசை விழா : இன்று மலைப்பாதை மூடல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜூலை 2017 11:07
வத்திராயிருப்பு: சதுரகிரி மலையில் கடந்த 4 நாட்களாக நடந்த ஆடி அமாவாசை விழா, நேற்று இரவு நடந்த சுபமங்கள பூஜைகளுடன் நிறைவு பெற்றது. இம்மலையில் சுந்தரமகாலிங்கசுவாமி, சந்தனமகாலிங்கசுவாமி, சுந்தரமூர்த்தி சுவாமி சிவாலயங்கள் உள்ளன. புராணகாலங்களில் வாழ்ந்த புகழ்பெற்ற 18 சித்தர்கள் இந்த மலையில் ஒன்றாக கூடி இறைவனை வழிபட்டனர். இங்கு வழக்கமாக ஆடி அமாவாசை விழா 10 நாட்கள் கொண்டாடப்படும். இந்த ஆண்டு மலையில் ஏற்பட்டுள்ள வறட்சியால் ஆடி அமாவாசை விழா 6 நாட்களாக குறைக்கப்பட்டது. இதையொட்டி ஜூலை 21 ல் பிரதோஷ வழிபாட்டுடன் துவங்கிய விழாவையொட்டி சிவராத்திரி வழிபாடு, அமாவாசை வழிபாடு நடந்தது. நேற்று பூஜையின் இறுதி நாள் வழிபாடு துவங்கியது. மூன்று கோயில்களிலும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, முதல்நாள் செய்யப்பட்ட அதே அமாவாசை அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். ’அரோகரா கோஷம்’ முழங்க மூன்றுகால பூஜைகளிலும் பங்கேற்றனர். தொடர்ந்து இரவு அர்த்தஜாம பூஜைகளுடன் சுவாமிகளுக்கான அமாவாசை அலங்காரம் களையப்பட்டு திருவிழா முடிவுக்கு வந்தது. இதை தொடர்ந்து இன்று மாலை 4 :00மணியுடன் மலைப்பாதை மூடப்படுகிறது. அதுவரை தரிசனத்திற்காக வரும் பக்தர்களுக்காக சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தரிசனத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூட்டம் குறைந்தது நேற்று முன்தினம் மலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் மலைப்பாதை முழுவதும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பாதி வழியிலேயே பலர் அடிவாரம் திரும்பினர்.,நேற்று மலைப்பாதைகளில் கூட்டம் குறைவாக இருந்ததால் மலையேறிச் சென்று தரிசனம் செய்தனர்.