ராமேஸ்வரம்: ஆடித் திருக்கல்யாண விழாவையொட்டி, ராமேஸ்வரம் கோயிலில் பர்வதவர்த்தினி அம்மன் திருத்தேரில் எழுந்தருளி, ஆடித் தேரோட்டம் நடந்தது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஜூலை 17 ல் கொடி ஏற்றத்துடன் ஆடித் திருக்கல்யாண விழா துவங்கியது. 9ம் நாள் விழாவான ஆடித் தேரோட்டத்தையொட்டி, கோயிலில் இருந்து பர்வதவர்த்தினி அம்மன் புறப்பாடாகி திருத்தேரில் எழுந்தருளினார். பின் அம்மனுக்கு கோயில் குருக்கள் மகா தீபாராதனை செய்ததும், கூடியிருந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின், பக்தர்கள் சிவ சிவ என கோஷமிட்டபடி திருத்தேரின் வடத்தை பிடித்து இழுத்து ரதவீதியில் வலம் வந்தனர். அப்போது ரதவீதியில் கூடியிருந்த பக்தர்கள் ஆடித் திருத்தேரை தரிசனம் செய்தனர். இதில் கோயில் தக்கார் குமரன் சேதுபதி, கோயில் இணை ஆணையர் மங்கையர்கரசி, உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், உதவி ஆணையர் பாலகிருஷ்ணன், முன்னாள் நகராட்சி தலைவர் அர்ச்சுணன், யாத்திரை பணியாளர் சங்க தலைவர் மகேந்திரன், இந்து அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர்.