பதிவு செய்த நாள்
26
ஜூலை
2017
09:07
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் ஆடிப்பூரத்தேரோட்டம் நாளை (வியாழன்) காலை நடப்பதை முன்னிட்டு நகரில் போக்குவரத்து மாற்றமும், பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. கடந்த 19ந் தேதி அன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயில் ஆடிப்பூரத்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் 9ம் திருநாளான நாளை தேரோட்டம் நடக்கிறது. இதற்காக அதிகாலையில் ஏகாந்த திருமஞ்சனம் முடிந்து, பிரம்மமுகூர்த்தத்தில் திருத்தேருக்கு எழுந்தருளும் ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அதனையடுத்து சரியாக 8.05 மணிக்கு தேரினை வடம்பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் தமிழக அமைச்சர்கள், நீதிபதிகள், மக்கள்பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
தேரோட்டத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கம் பெருமாள் மற்றும் மதுரை கள்ளழகர் கோயில்களிலிருந்து ஆண்டாளுக்கு பரிவட்டங்கள் இன்று கொண்டுவரபட்டு சாற்றப்படுகிறது. விழா ஏற்பாடுகளை தக்கார் ரவிசந்திரன், செயல் அலுவலர்கள் ராமராஜா மற்றும் அறநிலையத்துறையினர் செய்துள்ளனர். விருதுநகர் எஸ்.பி.ராஜராஜன் உத்தரவின்பேரில், 6 டி.எஸ்.பி, 19 இன்ஸ்பெக்டர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நகரின் அனைத்து பகுதிகளிலும் கேமிராக்கள் பொருத்தபட்டு கண்காணிக்கபடுகிறது.
போக்குவரத்து மாற்றம்; நாளை நடக்கவுள்ள தேரோட்டத்தை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் போக்குவரத்து மாற்றப்படவுள்ளது. இதன்படி மதுரை, தேனி, ஆகிய நகரங்களிலிருந்து அழகாபுரி வழியாக வரும் வாகனங்கள் ராமகிருஷ்ணாபுரம், சர்ச் சந்திப்பு, கோர்ட், ரயில்வே ஸ்டேசன், தாலுகா ஆபிஸ் வழியாக ராஜபாளையம் செல்லவேண்டும். ராஜபாளையத்திலிருந்து புறப்பட்டு மதுரை, தேனி செல்லும் வாகனங்கள் மம்சாபுரம், ஆத்துக்கடை, காமராஜர் சிலை வழியாக மதுரை செல்லவேண்டும். சிவகாசியிலிருந்து வரும் வாகனங்கள் கோர்ட், ரயில்வே ஸ்டேசன், தாலுகா ஆபிஸ் வழியாக ராஜபாளையம் செல்ல வேண்டும்.