பதிவு செய்த நாள்
27
ஜூலை
2017
11:07
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், நேற்று நடந்த ஆடிப்பூர விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் உடல் முழுவதும், அலகு குத்தியும், காவடிகள் மற்றும் பால்குடம் எடுத்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.
திருத்தணி முருகன் கோவிலில், நேற்று, ஆடிப்பூர விழாவை முன்னிட்டு, மூலவருக்கு அதிகாலை, 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, தங்க கிரீடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, மூலவருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. மதியம், 2:00 மணிக்கு, மலைக்கோவிலில் உள்ள காவடி மண்டபத்தில், உற்சவர் பெருமானுக்கு, 308 குடம் பாலாபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு, 7:30 மணிக்கு, வெள்ளி மயில் வாகனத்தில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி, மாடவீதியில் ஒரு முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஆடிப்பூர விழாவை ஒட்டி, சென்னை, வண்ணாரபேட்டை, தண்டையார் பேட்டை, கொருக்குபேட்டை, மண்ணடி, புளியந்தோப்பு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நேற்று முன்தினம் இரவே, திருத்தணிக்கு வந்து தேவஸ்தான குடில்கள், தனியார் விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களில் தங்கினர். நேற்று, காலை, 8:00 மணி முதல், பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற, உடல் முழுவதும் அலகு குத்தியும், மலர் மற்றும் மயில்காவடிகள் எடுத்து, பம்பை, உடுக்கை முழங்க கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் ஆண், -பெண் மற்றும் குழந்தைகள் மொட்டையடித்து சரவணபொய்கையில் புனித நீராடினர். பின், மலைப்படிகள் வழியாக சென்று, மூலவரை தரிசித்தனர். மேலும், சில பக்தர்கள் பால்குடம் எடுத்து சென்றும் வழிபட்டனர்.
3 மணி நேரம்: நேற்று, ஆடிப்பூரம் என்பதால், 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்ததால், பொதுவழியில் மூலவரை தரிசிக்க ஐந்து மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சிறப்பு தரிசனம், 100, 50 மற்றும் 25 ரூபாய் டிக்கெட் பெற்ற பக்தர்கள் இரண்டரை மணி நேரம் காத்திருந்து மூலவர் முருகப்பெருமானை தரிசித்தனர். மாவட்ட எஸ்.பி., சிபி சக்கரவர்த்தி உத்தரவின் பேரில், திருத்தணி டி.எஸ்.பி.,பாலசந்திரன் தலைமையில், 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் சிவாஜி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.