பதிவு செய்த நாள்
27
ஜூலை
2017
01:07
தஞ்சாவூர்: இன்று மதியம் 12.48 மணிக்கு ராகுபகவான் சிம்ம ராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதையொட்டி மேஷம், மிதுனம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் திருநாகேஸ்வரத்தில் பரிகாரம் செய்து வழிபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே ராகுதோஷ பரிகாரத் தலமாக விளங்கும் ராகு பெயர்ச்சி சிறப்பாக நடைபெற்றுவருகிறது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருநாகேஸ்வரத்தில் ராகுபகவான் சிவபெருமானை பூஜித்த திருத்தலமாக விளங்கும் கிரிகுஜாம்பிகை உடனாய நாகநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சுசீலமுனிவரின் குழுந்தையை அரவாகிய ராகு தீண்டியதால் ராகுவிற்கு சாபம் ஏற்பட்டது.இச்சாபம் நிவர்த்திபெற நான்கு தலங்கள் வழிப்பட்டு நிறைவில் திருநாகேஸ்வரத்தில் உள்ள நாகநாதசுவாமியை மகாசிவராத்திரி அன்று வழிப்பட்டு சாபம் நீங்கபெற்றார்.‘ராகுவே என் அருள் பெற்ற நீ என்னை வழிப்பட்டு பிறகு உன்னை வணங்கும் அடியார்களுக்கு உன்னால் ஏற்படக்கூடிய காலசர்ப்பதோஷம், சர்ப்பதோஷம், புத்திரதோஷம் ஆகியவற்றை நீக்கி அருள்பாலிக்கவேண்டும்’ என சிவன் பணித்தார்.
இத்தகைய சிறப்பு பெற்ற இராகுஸ்தலத்தில்,இன்று மதியம் 12.48 மணிக்கு ராகுபகவான் சிம்ம ராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி அடைந்தது. இதையொட்டி மேஷம், மிதுனம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்தனர். ராகு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு ராகு பகவானுக்கு கடந்த 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை முதல் கட்ட லட்சார்ச்சனையும், 31ம் தேதி முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 3ம் தேதி வரை 2ம் கட்ட லட்சார்ச்சனையும் நடைபெறுகிறது. 25ம் தேதி மாலை 6 மணிக்கு ராகு பகவானுக்கு முதல்கால யாகபூஜை தொடங்கியது. 26ம் தேதி காலையில் 2ம் கால யாக பூஜை, மாலையில் 3ம் கால யாக பூஜை நடைபெற்றது. தொடர்ந்து இன்று நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவாக மகா பூர்ணாஹதியும் தீபாராதனையும் மங்கள வாத்தியங்கள் முழங்க கடங்கள் புறப்பாடும் தொடர்ந்து இராகுபகவானுக்கும், நாகவள்ளி மற்றும் நாககன்னி ஆகியவற்றைக்கு மகா அபிஷேகங்கள் மற்றும் மகா தீபாராதனையும் நடைபெற்றது. இந்த ராகு பெயர்ச்சி விழாவில் தமிழகத்தில் இருந்து மட்டுமல்லாது பல வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்காண பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர்.