பதிவு செய்த நாள்
27
ஜூலை
2017
03:07
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத்தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் தேர் வடம்பிடித்து இழுத்து, ஆண்டாள், ரெங்கமன்னாரை தரிசனம் செய்தனர். ஆண்டாள் கோயில் ஆடிப்பூரவிழா கடந்த 19ல் கொடியேற்றத்துடன் துவங்க ,ஐந்துகருடசேவை, சயனதிருக்கோலம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்த நிலையில்,முக்கிய நிகழ்ச்சியான ஆடிப்பூர தேரோட்டம் இன்று(ஜுலை 27ல்) நடைபெற்றது. அதிகாலை திருமஞ்சனம் நடந்தது. ஸ்ரீரங்கம் பெருமாள்கோயில் மற்றும் மதுரை கள்ளழகர் கோயிலிலிருந்து வழங்கபட்ட பரிவட்டம், புடவை ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சாற்றப்பட்டது .இதன்பின் பிரம்மமுகூர்த்தத்தில் திருத்தேருக்கு எழுந்தருள, அங்கு பட்டர்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர்.
அமைச்சர்,கலெக்டர் இதையடுத்து காலை 8:00 மணிக்கு திருத்தேரினை வடம்பிடித்து மணவாளமாமுனிகள் மடம் ஜீயர்சுவாமிகள், அமைச்சர் ராஜேந்திரபாலாஜி,கலெக்டர் சிவஞானம் ,விருதுநகர் எஸ்.பி.,ராஜராஜன், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிபதி வசந்தி, எம்.எல்.ஏ.,க்கள் சந்திரபிரபா(ஸ்ரீவி.,) சுப்பிரமணியன்(சாத்தூர்) துவக்கி வைத்தனர். கோவிந்தா, கோபாலா கோஷத்துடன் பல்லாயிரக்கணக்கான ஆண், பெண் பக்தர்கள் தேரின் வடத்தினை தங்கள் தோளில் தாங்கியப்படி இழுத்து சென்றனர். நான்குரதவீதிகளிலும் தங்குதடையின்றி வந்த திருத்தேர், இரண்டே முக்கால் மணிநேரத்தில் அதாவது காலை 10:40 மணிக்கு நிலையை வந்தடைந்தது. அப்போதும் பக்தர்கள் கோவிந்தா, கோபாலா கோஷத்துடன் ஆர்ப்பரித்தனர்.