பதிவு செய்த நாள்
31
ஜூலை
2017
05:07
கர்நாடக மாநிலத்தில் கோயில்கள் எந்தளவுக்கு பிரசித்தமோ, அதே அளவு அங்கு வழங்கப்படும் அன்னதானமும் பிரபலம். இனிப்பு, காரம், பாயசம், பச்சடியுடன் அறுசுவை விருந்து அமர்க்களப்படுகிறது. இங்கு மிகச் சிறிய கோயில்களில் கூட பிரசாதம் உண்டு. அவை கோயில் மூடப்படுவது வரை தரப்படுவதும் உண்டு! இதில் ஸ்வீட், கேசரி, அவல் சாதங்கள், அரிசி சாதங்கள், சுண்டல் என ஏதாவது ஒன்று நிச்சயம் காலையில் இருக்கும் சற்று பெரிய கோயில்களில் மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை கோயிலுக்கு வரும் அனைவருக்கும் பிரசாத விநியோகம் உண்டு. இதனைக் கோயிலுக்கு வரும் அனைவரும் வாங்கிச் சாப்பிடத் தயங்குவதில்லை.
சிறு கோயில்களிலேயே இப்படியென்றால், தினமும் ஆயிரக்கணக்கில் கூட்டம் வரும் உடுப்பி, சிருங்கேரி, தர்மஸ்தலா, சுப்ரமணியா, மூகாம்பிகை கோயில், தங்ககொரநாடு அன்னபூரணி, கடீல் துர்கா பரமேஸ்வரி ஆகிய கோயில்களில் அன்னதானம் என்பது ஒரு முக்கிய கடமையாகவே செய்யப்படுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாப்பிட்டுப் பசியாறுகின்றனர்.
உடுப்பியில் தரிசனம் முடிந்து 12.30 மணி அளவில் சாப்பாடு போடும்போது சாப்பிட பெரும் கூட்டம் அலைமோதும்! வேதியர்கள் தனித்துச் சாப்பிட விரும்பினால் வழியுண்டு. ஆனால், சாப்பாடு ஒன்றுதான்! இந்தக் கோயிலில் சாப்பிடும் இடத்தில் ஓர் அதிசயத்தைக் காணலாம். ஆமாம், இங்கு பலர் தங்கள் உணவை, தட்டு அல்லது இலைக்கு மாற்றாக, தாங்கள் அமரும் இடத்துக்கு எதிரே, தரையைத் தண்ணீரால் துடைத்து, அந்தத் தரையில் உணவைப் போடச் சொல்லி சாப்பிடுகின்றனர். இதை நேர்த்திக் கடன் என்று கூறுகின்றனர்!
உடுப்பி கோயிலில் சாப்பாடு மண்டபம் அருகே ஆஞ்சனேயர் சன்னிதி உள்ளது. அவருக்கு ஒரு தனி ராசி உண்டு. இவர் வயிற்று நோய்களைக் குணப்படுத்தும் சக்தி உள்ளவராம். இவரிடம், எனக்குத் தொடர் வயிற்று வலி, ... நீதான் குணமாக உதவ வேண்டும் என கோரிக்கை வைத்தால் விரைவில் நிறைவேற்றி விடுவாராம். அப்படி குணமானதும் நேர்த்திக்கடனாக தரையில் உணவு போட்டு சாப்பிடுகிறார்கள். சிலர் தங்கள் கோரிக்கை நிறைவேறுவதற்கு முன்பே, நம்பிக்கையுடன் நேர்த்திக்கடனை முடிக்கிறார்கள்!
இந்தக் கோயிலில் சாதம் போட்டு முதலில் ரசம், அதற்குத் தொட்டுக் கொள்ள சாம்பாரில் போடப்படும் காய்கறி பரிமாறப்படுகிறது. தனியாகப் பொரியல் கிடையாது. அடுத்து, இரண்டாவதாக சாம்பார் பரிமாறப்படுகிறது. பிறகு பாயசம், கடைசியாக மோர்.
இந்தக் கோயில் சார்பாக நடத்தப்படும் பள்ளிகளிலிருந்து மதிய உணவு சாப்பிட ஏராளமான குழந்தைகள் வருகின்றார்கள். திருப்தியாய்ச் சாப்பிட்டுச் செல்கிறார்கள். இந்தக் கோயிலில் பக்தர்களுக்கு இன்னொரு கவுரவமும் உண்டு. கூட்டமாக வரும் பக்தர்கள் உடுப்பி கோயில் சார்ந்த இடங்களில், இரவு தங்கி, தங்களுக்கு இரவு உணவு தயாரித்துத் தரும்படி கோரிக்கை வைத்தால் நிறைவேற்றுகிறார்கள்.
சிருங்கேரி, தர்மஸ்தலா போன்ற இடங்களிலும் இதேபோல் பகல் 12.30 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. வேதியர்கள் தனியாகச் சாப்பிட விரும்பினால், ஒரு மணி நேரம் கூடுதலாகக் காத்திருக்க வேண்டும். தர்மஸ்தலாவில் இரவும் அன்னதானம் உண்டு.
உடுப்பி, சிருங்கேரியை விட பல மடங்கு கூடுதல் கூட்டம் தர்மஸ்தலாவுக்கு வந்து செல்கிறது. தங்கவும் எளிதாக தர்மஸ்தலா தேவஸ்தானத்தின் சார்பில் குறைந்த கட்டணத்தில் அறைகள் வாடகைக்குக் கிடைக்கின்றன. தர்மஸ்தலாவுக்கு வருபவர்களில் வசதி குறைந்தவர்கள்தான் அதிகம் காரணம் தர்மஸ்தலா பகவானுக்கு, நீதிபதி அந்தஸ்து உண்டு. கோர்ட்டு, கேஸ் என்று படியேறத் தயங்குபவர்கள் இந்தக் கோயில் பஞ்சாயத்துக்கு வருகிறார்கள். கோயில் தர்மகர்த்தாவால் வழங்கப்படும் தீர்ப்பை, மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறார்கள். அனைத்து பக்தர்களும் மறக்காமல் அன்னதானம் சாப்பிட்டுச் செல்கின்றனர். நிறைய கூட்டம் என்பதற்காக ஏனோ தானோ என்று சமைக்காமல் மிகுந்த அக்கறையுடன் அறுசுவை விருந்து பரிமாறப்படுகிறது.
அடுத்து அன்னபூரணி கோயில்! தன் கணவன் சிவனுக்கே பசியைப் போக்க அன்னமளித்தவள் அம்பிகை. அப்படிப்பட்டவள், தன்னை நாடி வரும் பக்தர்களைக் கவனிக்காமல் இருப்பாளா? ஜொலிக்கும் தங்க அன்னபூரணியை தரிசிப்பதுடன், சுவையான சாப்பாட்டையும் நாம் ருசிக்கலாம். இங்கும் இரவு பக்தர்களுக்கு உணவு உண்டு!