பதிவு செய்த நாள்
31
ஜூலை
2017
05:07
ஒவ்வொரு இல்லத்திலும் இறைநாமம் கமழ வேண்டும் என்பார் சத்குரு வேங்கடராம சுவாமிகள். இதற்காக என்ன செய்யவேண்டும்? எளிய வழிமுறைதான். அனைவரும் தினமும் கடைப்பிடிக்கலாம். வீட்டிலும் அலுவலகத்திலும் எப்போதும் சிவ சிவ ராம் ராம் நாராயணா முருகா, கிருஷ்ணா குருவாயூரப்பா. ஈஸ்வரீ, மாரியம்மா, ஹரி ஓம் போன்ற இறைநாமங்களை - அவரவருக்குப் பிடித்த தெய்வ நாமத்தைச் சொல்லிப் பழகி வரவேண்டும்.
தொலைபேசியிலும் ஹலோ எனபதைத் தவிர்த்து, இறைநாமங்களை ஒலித்து வரவேண்டும் கும்பகோணம் திப்பிராஜபுரம் அருகே உள்ளது. தட்சிண திருவள்ளூர் என்று போற்றப்பெறும் சேஷம்பாடி. இந்த புண்ணிய பூமியில் உள்ள சேஷசாயீ வரதராஜப்பெருமாள் கோயில் உன்னதமான பிதுர்முக்திதலம். இப்பெருமாளே பூலோகத்தில் சகல விஷ்ணு நாமங்களையும் அருளியவர் என்பர்.
சத்குரு ராமதாசரை குருவாய்க் கொண்ட சத்ரபதி சிவாஜி, ஒருவரை ஒருவர் பார்க்கும்போது ராம்ராம் என்று கூறும் நன்னெறி வழக்கை சமுதாயத்தில் மீண்டும் புனரமைத்த பக்திமான். சோழநாட்டிலும் முற்காலத்தில் ஒருவர் சந்திக்கையில் நமச்சிவாய, நாராயணா என்று கூறும் இனிய நடைமுறை பொலிந்தது.
சுமார் 400 ஆண்டுகளுக்குமுன் திருவிடைமருதூர் அருகே திருவிசநல்லூரில், கிணற்றில் கங்கைப் பிரவாகத்தைக் கொணர்ந்து லட்சக்கணக்கான மக்கள் கங்கையில் நீராடும் பாக்கியத்தைப் பெற்றுத் தந்தவர் மஹான் ஸ்ரீதரஅய்யாவாள் ஆவார். அவர் காலத்தில் உழுதல், நாற்று நடுதல், கதிரறுத்தல், போரடித்தல் போன்ற அனைத்துக் காரியங்களிலும் மக்கள் இறை நாமங்களை உச்சரித்த பொற்காலமும் நிலவியது. இப்புனிதத்தை மீண்டும் சமுதாயத்தில் <புனரமைக்க வேண்டும். குறைந்த பட்சம் இறை நாமங்களை 108 முறை ஓதியும் எழுதியும் வரவேண்டும்.
வடபாரதத்தில் மதுராவில் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது ராதே என்று கூறி ஆண்- பெண் வித்தியாசம் பாராமல் வணங்குவதை இன்றும் காணலாம்.
மயிலாடுதுறை அருகே உள்ளது பேரளம். இத்தல மூலத்தானத்தில்தான் பேரளமகரிஷி சிவபெருமானுடைய அனைத்துவிதமான பெயர்களும் (நாமங்கள்) கருவறைச் சுவற்றில் பிரகாசிப்பதை தரிசித்தார். அதாவது இறை உருவமாக ஒரு வடிவமாக அல்லாது, ஓம் வடிவம் போன்று அட்சர வடிவிலேயே தரிசிப்பதற்கு நாமாட்சர தரிசனம் என்று பெயர். அதாவது பிரபஞ்சத்தில் ஆதிசிவனுக்கு எத்தனைக் கோடிப் பெயர்கள் உள்ளனவோ அத்தனைப் பெயர்களும் அட்சர வடிவிலேயே காட்சி தரும். குருவருள் திரண்டோருக்கு பரிபூரணமாகக் கிட்டும் தரிசனம்.
கார்ஷணாஜினி எனும் மகரிஷி, பேரளம் சுயம்புநாதர் கருவறையில் இறைவனின் கோடிக் கணக்கான நாமங்களை ஒலி, ஒளி வடிவில் தரிசிக்கும் பேறைப் பெற்றதால் பூலோகத்தின் நாமதிலகக் கோவிலாய் சித்தர்கள் பேரளம் தலத்தைப் போற்றுகிறார்கள். குழந்தைகளுக்கான பெயர்கள், கடைகள் நூல்களுக்கான பெயர்களை இத்தலத்தில் சூட்டுதல் மிகவும் புனிதமானது.
பேரளம் தலத்தின் நாமசக்தி பற்றி அறியாது போனோமே என்று எண்ணி ஏங்காது, எந்த வயதிலும் பேரளம் கோயிலில் தன் பெயரை எழுதி அஷ்டோத்திர, சஹஸ்ர நாம அர்ச்சனை செய்து வழிபட்டு, நட்சத்திர அட்சர சக்திகளைப் புனரமைத்துக் கொள்ளலாம். இவ்வாறு எந்த வயதிலும் பெயரை எழுதி நாமசக்தியை ஏற்றுவதற்கு அட்சர மாலி கா ரட்சை என்று பெயர்.
வாழ்வில் எல்லாராலும் திருக்கயிலாயம். பன்னிரு ஜோதிர் லிங்கங்கள், 274 தேவாரத் தலங்கள், 108 திவ்ய தேசங்கள் எல்லாவற்றையும் தரிசிக்க இயலாதுதான்.
ஆனால், துர்க்கா சஹஸ்ர நாமம், காயத்ரீ சஹஸ்ர நாமம், பவாநீ சஹஸ்ர நாமம் போன்ற எல்லா தெய்வங்களுக்குமான 108, 1008 போற்றித் துதிகளை, சஹஸ்ர நாமத் துதிகளை, வாழ்வில் தினமும் ஒன்றாய் அல்லது வாரத்துக்கு ஒன்றாய் ஓதிவராலமே!
இதுவும் இறைநாம பூஜையே. இதில் பூலோகம் மட்டுமல்லாது, ஏனைய லோகங்களின் உள்ள கோயில்களின் எல்லா மூர்த்திக்குமான ஆயிரக்கணக்கான இறை நாமங்களில் ஒரு சிலவற்றையாவது ஓதினோம் என்ற திருப்தி கிட்டுமல்லவா உடனே வாரத்திற்கு அல்லது ஒரு பட்சத்திற்குள் ஒவ்வொரு தெய்வத்துக்கான 1008 போற்றித்துதிகளை ஓதுவதைக் கடைபிடிக்கத் தொடங்குங்கள்.
ஒலிக்கும் ஒளி உண்டு; ஒளிக்கும் ஒலி உண்டு என்பதை நிரூபித்த மெய்ஞ்ஞானத் தலம் பேரளம். கலியுகத்தில், இறைநாமம் ஓதுதலே முக்திக்கான எளிய மார்க்கம். எனவே பேரளம் தலத்தில் 108, 300 (தினசரி), 1008 பூக்கள், புது நாணயங்கள், வெள்ளிக்காசுகள்; நவதானியங்கள், 1008 தாமரைப்பூக்களால் அர்ச்சிப்பதானது பன்மடங்காய் இறைநாமங்களை ஓதிய பலன்களை நல்குவதாம்.