பதிவு செய்த நாள்
31
ஜூலை
2017
05:07
ராமன் வனவாசத்தின்போது ஒருநாள், சீதா தேவியின் மடியில் தலைவைத்து படுத்து சயனித்திருந்தார். அப்போது, காகாசுரன் என்ற அசுரன் காக்கை வடிவில் வந்து சீதையை தன் அலகால் கொத்தினான். சட்டென்று கண் விழித்த ராமன். தரையில் கிடந்த புல்லைப் பிடுங்கி, மந்திரம் ஜபித்து காகாசுரன் மீது அஸ்திரமாக எறிந்தார்.
அஸ்திரம் துரத்த, காகாசுரன் தப்பிக்க மூவுலகையும் சுற்றியும் பயனில்லை. கடைசியாக, ராமன் காலில் விழுந்து சரணடைய, சீதை மனமிரங்கி, ராமபிரானிடம் அசுரனுக்குக் கருணை காட்டச் சொல்கிறாள். ராம பாணம் காரியத்தை செய்து முடிக்காமல் திரும்பாது என்பதால், அசுரனின் ஒரு கண்ணை மட்டும் பிடுங்கிச் சென்றது. மகாபாரதத்தில் துரோணரின் குருகுல வாசத்தின் போது இளவரசன் துருபதன் நெருங்கிய தோழன். துருபதன், தான் அரச பதவிக்கு வந்தவுடன் துரோணருக்கு பாதி ராஜ்ஜியத்தை அளிப்பதாக வாக்குறுதி தந்திருந்தான். குருகுலவாசம் முடிந்தபின் இருவரும் பிரிந்தனர்.
காலச்சக்கரம் சுழன்றோட, துரோணர் மிக வறுமையில் வாடினார். குழந்தை அசுவத்தாமனுக்கு பால் வாங்கிக் கொடுக்கக்கூட முடியாத ஏழ்மை. அவர் துருபதனிடம் வந்து பழைய நினைவுகளைக் கூறி, ராஜ்ஜியம் வேண்டாம். ஒரு பசு கொடுத்தால் கூட போதும் என்று வேண்டினார். துருபதன் அகந்தையில் அவரை? அவமானப்படுத்தி அனுப்பி விட்டான்.
அவமானப்பட்டு, வெறுங்கையுடன் திரும்புகையில், அஸ்தினாபுரத்து அரண்மனைத் தோட்டத்தில் ஒரு காட்சி அவர் கண்ணில் பட்டது. அங்கு விளையாடிக் கொண்டிருந்த பாண்டவர்களும், கவுரவர்களும் கிணற்றில் விழுந்த ஒரு பந்தை எடுக்க முடியாமல் விழித்துக் கொண்டிருந்தனர். அது கண்டு துரோணர், ஒரு தர்ப்பைப் புல்லைப் பிடுங்கி, மந்திரம் பிரயோகித்து எறிந்த பந்தை எடுத்துத் தந்தார். பிறகு, பீஷ்மரே அவரை பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் தனுர் வித்தை கற்பிக்கும் ஆசிரியராக்கினார்.
அசோகவனத்தில், சிறை வைத்திருந்த சீதையிடம் வந்த ராவணன், ராமன் ஒரு சாதாரண மனிதன். எனக்கு நிகரில்லாதவன். தேவர்கள் என்னிடம் பணி புரிகிறார்கள். நவக்கிரகங்கள் என் அரண்மனையில் படியாக இருக்கிறார்கள். என் இச்சைக்கு உடன்படு அரண்மனையில் சுகபோகங்களை அனுபவிக்கலாம். என்றெல்லாம் கூறி, சாமவேதம் கற்றறிந்த ராவணன், காமவேதம் ஓதினான். அப்போது சீதை தன் எதிரே இருந்த புல்லைப் பிடுங்கி அவன் முன் போட்டாள். ராமனைப் பொருத்தவரை, நீ ஒரு புல்லுக்குச் சமம். ஒரு புல்லைக் கொண்டே உன்னைக் கொன்று விடுவார் என்று சொல்லாமல் சொல்லி அறிவுறுத்தினாள்.