பதிவு செய்த நாள்
31
ஜூலை
2017
05:07
ராம நாமத்தை முறையாக உச்சரித்தால் ஏற்படும் பலன்கள் ஏராளம். முறையற்ற ஆசைகளை நீக்கி, புத்திர பாக்கியத்தை அளித்து, பூலோக வாழ்க்கையில் அளவற்ற செல்வத்தையும் இறுதியில் விஷ்ணு லோக தரிசனத்தையும் அளிக்கும் அற்புத தாரக மந்திரமாகும். ஆனால் ராம நாமத்தை உச்சரிப்பதால் ஏற்படும் பயன்களை எவரும் முழுமையாக உணர முடியவில்லையே ஏன்?
அதற்குக் காரணம், நம் மனமும், உடலும் இயைந்து போகாதது தான்! ஒவ்வொரு மனிதனுக்கு தேகத்தோடு மனோதேகமும் உண்டு இவை தவிர ஏனைய தேகங்களும் உண்டு. எனினும் தெளிவு பெறுவதற்கு மேற்கண்ட மனிததேகம், மனோ தேகம் என்ற இரண்டையும் எடுத்துக் கொள்வோம். இவ்விரண்டையும் ஒருங்கிணைப்பதே ஜபம். ராம, ராம, ராம என்று ஜபிக்கும்போது சில சமயம் உதடு உச்சரித்தாலும் மனம் எங்கோ அலைபாய்கிறதல்லவா? இதன் பொருளென்ன? மனித தேகம் உதட்டால் ராம நாமத்தை ஒலித்திட்டாலும், மனோ தேகம் எங்கோ சென்று விடுகிறது.
மனித தேகத்தோடு ஒன்றிப் போகாமல் ஏனைய எண்ணங்களின்பால் மனோதேகம் சென்று தனித்துச் செயல்படுகிறது. மனோ தேகம், மனித தேகம் இரண்டும் ஒன்றையொன்று சார்ந்திருந்து இவ்விரண்டும் ஒன்றுபட்டு இயங்கினால்தான் தியானம் மற்றும் ஜபத்தின் முழுப் பலன் கிட்டும். எனவேதான், ராம நாமத்தின் முழுச் சக்தியினை எவராலும் பெற இயலவில்லை. அப்படியானால் மனித தேகத்தையும், மனோதேகத்தையும் ஒன்றாக அமையச் செய்யும் வழிமுறை என்ன? இதுவே ராம நாம ஜபம்! மிகவும் எளிதான ராமநாமத்தின் பின்னணியில் இது அமைந்திடில் அது ஓர் அற்புதமான ஆன்மிக நிலைக்கு வழி கோலுமன்றோ!
இவ்வரிய ஆன்மிக ரகசிய வழிமுறையை ராம நாம சக்கரம் என்ற ஓர் அற்புத ரகசியத்தை, மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சுவாமிகள் அருளியுள்ளார். ஸ்ரீராம நாம மூலச்சக்கரமானது ராம நாமத்தின் இரு அட்சரங்களையும் நான்கு கட்டங்கள் கொண்ட ஒரு சதுரத்துக்குள் அமைப்பதாகும். இந்தச் சக்கரமே இறைவன் ஆட்சி செய்யும் பிரபஞ்சம். ராம நாமமே இந்தப் பிரபஞ்சத்தின் முழுப் பொருளையும் உணர்த்துவதாகும். சித்தர்கள் அருளுகின்ற இந்த ஜபமுறையில், மனித தேகத்துக்குரிய ஜபமாக வலது கையின் சுட்டுவிரல் (குருவிரல்), நடுவிரல் (சனி விரல்), இரண்டு முழு தேகத்தின் சார்பாக இயங்குகின்றன. இதுவே தேகத்துக்கான பயிற்சி.
குருவிரல், சனி விரல் இரண்டும் ராம நாம மூல சக்கரத்தில் இயங்கும் போது மனோதேகமானது ராம, ராம என்று உச்சரிக்கின்றது. அதாவது மானசீகமாக ராம ராம என்று துதிக்க வேண்டும். இதுவே மனோ தேகத்துக்கான பயிற்சி! முதலில் வலது கையின் குரு விரலைச் சக்கரத்தின் முதல் கட்டத்தின் மீது வைத்து ரா என்று உச்சரிக்க வேண்டும். இரண்டாவதாகச் சனி விரலை இரண்டவாது கட்டத்தின் மீது வைத்து ம என்ற அட்சரத்தின் மேல் வைத்து ம என்று மனிதனுள் உச்சரிக்க வேண்டும். மூன்றாவதாகச் சனி விரலை நகர்த்தாமல் குரு விரலை மட்டும் நகர்த்தி இப்போது சக்கரத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள ரா என்ற அட்சரத்தின் மேல் வைத்து ரா என்று மனத்தில் உச்சரிக்க வேண்டும்.
நான்காவதாக ம அட்சரத்தின் மேல் உள்ள சனி விரலை எடுத்துவிட்டு மீண்டும் அதே அட்சரத்தின் மேல் வைத்து ம என்று மனதுக்குள் துதிக்க வேண்டும். இவ்வாறாக, ராம நாம என்று இருமுறை ஓதிட ராம நாம மூலச்சக்கரத்தின் பரிபூரண ஜப எண்ணிக்கை ஒன்றாகிறது. இந்த ஜபத்தை தினந்தோறும் குறித்த நேரத்தில் குறித்த இடத்தில் முறையாகச் செய்தால் ராம நாம தாரக மந்திரத்தில் மனம் ஒருமைப்பட்டு தியான நிலையை உண்டாக்கும்.
இந்த ராம சக்கரத்தை தங்கம், சந்தன பலகை, வெள்ளி, தாமிரத் தகடு போன்றவற்றில் பொறித்து ஜபம் செய்தல் விஷேமாகும். அரச மரம், ஆல மரம், வேம்பு மரம் போன்ற ஹோம சமித்துக்குரிய பலகைகளிலும் இந்த மூலச்சக்கரத்தைப் பொறித்திடலாம். எளிமையான பயிற்சிக்காக முதலில் இந்தச் சக்கரத்தைக் காகிதத்தில் வரைந்து கொள்ளலாம். மன அமைதி, சாந்தம், தேஜஸை அளிக்கவல்லது இந்த ராமநாம ஜபம்.