பராசக்தி வழிபாடான ஸ்ரீவித்யா உபாசனையில் ஸ்ரீசக்கரம் முக்கியமான பங்கை வகிக்கிறது. இதில் மந்திர- தந்திர - யந்திர அம்சங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்திருக்கின்றன. வரிவடிவமாக இருப்பதால், இது சகுணப்பிரம்மத்தின் உருவத்தன்மையையும், நிர்க்குண பிரம்மத்தின் அருவத் தன்மையையும் குறிக்கின்றது. உபாசிப்பவரின் பக்தி சாதனைகளின்மூலம் இந்த ஸ்ரீசக்கரத்தில் தெய்வீக சக்திகள் அனைத்தும் ஒன்றுகுவிந்து, அந்த சக்திகளின் கதிரியக்கங்கள் சுற்றிலும் பரப்பப்படுகின்றன. இதன் காரணமாக பக்தர்கள் பலப்பல பயன்களை எய்தியிருக்கிறார்கள்.
ஸ்ரீசக்கரத்தின் ஒன்பது சுற்றுகள் மாறுபட்ட வடிவில் இருக்கின்றன. நடுவில் கேந்திர ஸ்தானத்தில் புள்ள வடிவில் பிந்து என்ற பராசக்தியின் பீடம் இருக்கிறது. இந்த ஒன்பது சுற்றுகளே ஆவரணங்கள் எனப்படுகின்றன. இவை ஒரு கோயிலின் ஒன்பது சுற்றுப் பிராகாரங்களைப் போன்றவை. கோயிலின் கருவறை ஸ்தானத்தில் பிந்து இருக்கிறது ஒன்பது பிராகாரங்களைக் கொண்ட ஒரு கோயிலில் ஒவ்வொரு பிராகாரமாக வலம்வந்து முடிவில் கர்ப்பகிரகத்திற்குச் சென்று அங்கே மூல விக்ரகத்தை தரிசிப்பதைப் போன்று, இந்த ஒன்பது ஆவரணங்களையும் கடந்து உள்ளே பிந்து ஸ்தானத்தில் அன்னை பராசக்தி சிவசக்தி ஒன்றிய வடிவாக -கிவகாமேசுவரியாக எழுந்தருளியிருக்கிறாள். ஒவ்வொரு ஆவரணத்திலும் அன்னையின் பரிவார தேவியர்கள், யோகினியர்கள் சக்தி தேவியர் என்ற பெயரில் நிலை கொண்டிருக்கிறார்கள். இந்த யாந்த்ரீக விஷயங்களைத்தான் முத்துஸ்வாமி தீட்சிதர் நவாவரணக் கீர்த்தனைகளில் சுருக்கமான குறியீடுகளாகக் காண்பித்திருக்கிறார்.
ஸ்ரீசக்கரத்தின் உள்ளே, மேல்நோக்கிய படி நான்கு முக்கோணங்கள் சிவ சொரூபமாகவும், கீழ் நோக்கிய ஐந்து முக்கோணங்கள் சக்தி சொரூபமாகவும் கருதப்படுகின்றன. இந்த முக்கோணங்கள் ஒன்றோடு ஒன்று கூடி 43 சிறிய முக்கோணங்களைத் தோற்றுவிக்கின்றன. இவையனைத்தும் அன்னையின் பரிவார தேவதைகளின் பீடங்களாகும். ஒன்பது ஆவரணங்களின் வடிவங்கள் அந்தந்த கீர்த்தனத்தோடு இணைக்கப்பட்டுள்ளன.
முதல் ஆவரணம் ஸ்ரீசக்கரத்தின் முதல் வெளிச்சுற்று மூன்று இணைகோடுகளாலான - ஹோம குண்டத்தைப் போன்று சதுர வடிவமானது. இதுவே ஸ்ரீபுரம் அல்லது திரிபுரம் என்று அறியப்படுகிறது. த்ரைலோக்ய மோகன சக்ரம் என்றும் கூறப்படுகிறது. இதன் யோகினி தேவதையின் பெயர் ப்ரகட யோகினி. இதில் குடிகொண்டிருக்கும் சக்தி தேவியர் பலர்.
இரண்டாவது ஆவரணம் வட்டவடிவமான இணை கோடுகளின் உள்ளே (மேகலை) 16 தளங்களைக் கொண்டு பதினாறு இதழ் தாமரையைப் போன்றது. இந்த பதினாறு இதழ்களும் பதினாறு சக்தி தேவியர்களின் ஸ்தானங்கள். இதுவே ஸர்வாசா பரிபூரக சக்ரம் என்றும் கூறப்படுகிறது. இதன் அதிஷ்டான யோகினி குப்த யோகினி எனப்படுகிறாள்.
மூன்றாவது ஆவரணம் எட்டு இதழ்களைக் கொண்ட தாமரையைப் போன்று வட்ட வடிவமானது இந்த இதழ்கள் எட்டு சக்தி தேவியரின் பீடங்களாகும். ஸர்வ ஸம்ஷோபண சக்ரம் என்று இந்த ஆவரணம் அழைக்கப்படுகிறது. இதன் யோகினி தேவதையின் பெயர் குப்த தரயோகினி.
நான்காவது ஆவரணம் இது 14 சிறு முக்கோணங்களால் சூழப்பட்ட அறுகோணம் ஆகும். இந்த பதினான்கு கோணங்களில் சக்திதேவியர் நிலை கொண்டுள்ளனர். இது ஸர்வ ஸௌபாக்ய தாயக சக்ரம் எனப்படுகிறது. இதன் யோகினியின் பெயர் ஸம்ப்ரதாய யோகினீ.
ஐந்தாவது ஆவரணம் இது பத்து சிறு முக்கோணங்களைச் சுற்று எல்லைகளாகக் கொண்ட அறுகோணம். இந்த கற்றுக் கோணங்கள் பத்து சக்தி தேவியர்களின் இருப்பிடங்கள் இந்த ஆவரணம் ஸர்வார்த்த ஸாதகம் எனப்படுகிறது. இதன் யோகினி தேவதை குலோத்தீர்ண யோகினி எனப்படுகிறாள்.
ஆறாவது ஆவரணம் இதுவும் பத்து சிறு முக்கோணங்களைக் கொண்டே அறுகோணம். இந்த எல்லைக் கோணங்களின் பத்து சக்தி தேவியர்கள் குடிகொண்டிருக்கின்றனர். இந்த ஆவரணம் ஸர்வரக்ஷாகர சக்ரம் எனப்படும். நிர்ப்பய யோகினீ என்பவள் இதன் அதிஷ்டான தேவதையாவாள்.
ஏழவாது ஆவரணம் இது எட்டு சிறு முக்கோணங்களைச் சுற்றுகளாகக் கொண்ட ஒரு எண் கோண வடிவம். இந்த எட்டு முக்கோணங்களிலும் எட்டு சக்தி தேவியர் உறைந்திருக்கிறார்கள். இந்த ஆவரணம் ஸர்வ ரோகஹரம் எனப்படுகிறது. இதன் யோகினியின் பெயர் ரஹஸ்ய யோகினீ என்பதாகும்.
எட்டாவது ஆவரணம் இது ஒரே முக்கோண வடிவமானது. இதிலேயே சக்தி தேவியர்களும், அதிரஹஸ்ய யோகினீ என்ற தேவதையும் பீடங்களைக் கொண்டிருக்கிறார்கள். ஸர்வஸித்தி ப்ரதம் என்று இந்த ஆவரணம் அழைக்கப்படுகிறது.
ஒன்பதாவது ஆவரணம் மேற்சொன்ன எட்டவாது ஆவரண வடிவமான முக்கோணத்தின் மையப்பகுதியில் புள்ளி வடிவில் இருப்பதே ஒன்பதாவது ஆவரணமாகும். இதுவே பிந்து ஸ்தானம். இதில் வாமாதியர்கள் என்ற சக்தி தேவியர்களும், அதிஷ்டான யோகினி தேவதையான பராபர ரஹஸ்ய யோகினீயும் இடம் கொண்டிருக்கிறார்கள். பிந்து ரூபமான இந்த ஆவரணம் ஸர்வானந்த மயசக்ரம் எனப்படுகிறது. கோயில் கருவறை போன்ற இந்த கேந்திர பிந்துவில்தான் அன்னை பராசக்தி சிவகாமேசுவரியாக- சிவனுடன் ஒன்றியவளாக எழுந்தருளியிருக்கிறாள்.
நாம் கோயிலின் ஒவ்வொரு சுற்றுப் பிராகாரமாக வலம் வந்து, ஆங்காங்கே இருக்கும் மூர்த்திகைளயும் தரிசித்து முடிவில் மூலவரை வணங்குகிறோம். அதுபோல முத்துஸ்வாமி தீட்சிதர் நவாவரணக் கீர்த்தனைகளில் ஒவ்வொரு ஆவரணமாக வலம் வந்து, அங்கங்கே இருக்கும் யோகினி தேவியர்களையும், சக்தி தேவியர்களையும் வணங்கிவிட்டு, முடிவில் ஒன்பதாவது ஆவரணத்தில் பிந்துஸ்தானத்தில் வீற்றிருக்கும் கமலாம்பாளின் திவ்ய தரிசனத்தைக் கண்டு பரவசம் எய்துகிறார். கமலாம்பாள் பாதம் பணிந்து போற்றுவோம்.