இந்தோனேசியா, தாய்லாந்து போன்ற தென்கிழக்கு நாடுகளில் கருடவழி பாடு மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. தாய்லாந்தின் அரசாங்க சின்னமே கருடன்தான். எல்லா அரசாங்கக் கடிதங்களின் தலைப்பிலும் கருடன் உருவம் பதிப்பிக்கப்பட்டு இருக்கிறது. வர்த்தக நிறுவனங்கள் அரசாங்க அனுமதியுடன் தங்கள் கடிதத்தின் தலைப்பில் கருடனைப் பதிப்பித்துக் கொள்ளலாம். இந்தக் கருடன் சின்னத்திற்கு மதிப்பு அதிகம். மகாவிஷ்ணுவின் சிலையே எங்கும் பிரதானமாக விளங்குகிறது. சதுர்புஜம் கொண்டு சங்கு, சக்கரம், வரத அபய மத்திரையுடன் கருடன் மீதமர்ந்து காட்சியளிக்கிறார். கருடவாகனத்தில் அமர்ந்த விஷ்ணு உருவச்சிலைகள் இங்கு ஏராளம். மிகவும் பிரபலம் தாய்லாந்து மன்னரின் பிரத்யேக சின்னமும் கருடன்தான். கருடன் விஷ்ணுவுடன் தொடர்புடையது என்கிற நம்பிக்கை தாய் மக்களிடையே பரவலாகக் காணப்படுகிறது.
தெற்கு தாய்லாந்தில் சாயா என்கிற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கருடனுடன் கூடிய மகாவிஷ்ணுசிலை 4-5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இது மதுரா, அமராவதி சிற்பங்களுடன் வைக்கப்பட்டிருக்கிறது. ஸ்ரீதேவா என்கிற வடமத்திய தாய்லாந்தில் பல இந்துக் கடவுளின் பலவித வடிவங்கள் இப்போது கிடைத்திருக்கின்றன. அதில் கருடனுடன் கூடிய விஷ்ணு மற்றும் சூரியன் சிலைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. தாய்லாந்தின் தேசிய தொல்பொருட்காட்சி சாலையில் ஒரு பெரிய லிங்கம், சிவன், உமை, கருடன் சிலைகளைக் காணலாம். புத்தர் கோயிலின் நுழைவாயில் அல்லது கர்ப்பகிருகம் போன்ற இடங்களில் கருடன் சிலை வைக்கப்பட்டிருக்கிறது. மேலும், சிறு தெய்வங்களை அஷ்டதிக் பாலகர்கள், யட்சர், கின்னரர், யாளி, மகரம் போன்ற புராண கால விலங்குகள் போன்றவற்றுடன் கருடனின் உருவங்களையும் பவுத்த கோயில்களில் தாராளமாகப் பயன்படுத்தி இருப்பதைக் காணலாம். தாய்லாந்தின் மதம், பவுத்தம், இந்து, அனிமிஸாம் என்ற மூன்றும் கலந்தது இந்த மூன்று மதத்தினரும் கருட வழிபாட்டை மேற்கொள்கிறார்கள் என்பதே மதங்களின் ஒற்றுமைக்குக் காரணமாக அமைந்துள்ளது.