பதிவு செய்த நாள்
05
ஆக
2017
10:08
சேலம்: ஆடி வெள்ளி முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில், நடந்த சிறப்பு பூஜையில், ஏராளமான மக்கள், சுவாமியை வழிபட்டனர்.
சேலம், செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோவிலில், வண்ண மலர்களால், பிரமாண்ட பல்லக்கு உருவாக்கப்பட்டது. அதில், பூர்ண கும்பவரலட்சுமி, காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வர காமாட்சி, காசி அன்னபூரணி, மதுரை சுந்தரேஸ்வரர் மீனாட்சி கோலத்தில் எழுந்தருளிய மாரியம்மன், வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிறப்பு நாதஸ்வரம், பேண்டு வாத்தியம், கேரள பஞ்ச வாத்தியம் முழங்க வலம் வந்த மாரியம்மனை, வீதியின் இருபுறமும் திரண்டு, பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேலும், இடைப்பாடி, கவுண்டம்பட்டியில் உள்ள சின்னமாரியம்மன், சந்தனக்காப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார்.
* ஓமலூர், கோட்டை மாரியம்மன் கோவிலில், ஆன்மிக நற்பணி குழு சார்பில், 12ம் ஆண்டாக, உலக நன்மைக்கான நவசக்தி ஹோமம், 1,008 திருவிளக்கு பூஜை நடந்தது. மூலவர் அம்மன், மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
* ஆத்தூர், கோட்டை, சம்போடை வன மதுரகாளியம்மன் கோவிலில், உலக நன்மை, மழை வேண்டியும், பால், பழம், மஞ்சள், தயிர், குங்குமம் அபிஷேகம் நடந்தது. மதுரகாளியம்மன், வெள்ளி கவசம், புஷ்ப சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். 12:30 மணிக்கு, 350 தீபலட்சுமி திருவிளக்கு பூஜை நடந்தது. ஏராளமான பெண்கள், தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.
* பேளூர் கரடிப்பட்டி, லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், குடும்பத்தில் செல்வம் பெருக, திருமண தடை நீங்க, குழந்தை பாக்கியம் பெற, நவகிரஹ தோஷம் நீங்க, சுமங்கலி பெண்கள் சேர்ந்து, வரலட்சுமி பூஜை நடத்தினர். தொடர்ந்து, மக்கள் நலம் பெறவும், மழை பெற வேண்டியும், கோவில் வளாகத்தில், திருவிளக்கு பூஜை நடந்தது. இதில், ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். லட்சுமி நாராயண பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி தாயார், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏத்தாப்பூர், சமயபுரம் மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு, பூஜை நடந்தது. மதியம், 12:00 மணிக்கு மேல், தீச்சட்டி எடுத்து, ஏராளமான பக்தர்கள் கோவில் வளாகத்தை வலம்வந்தனர். வரலட்சுமி பூஜையொட்டி, 100க்கும் மேற்பட்ட பெண்கள், குங்குமம் வைத்துக்கொண்டு, திருநங்கை காலில் விழுந்து ஆசிபெற்றனர்.