பதிவு செய்த நாள்
05
ஆக
2017
03:08
பவானி: ஆடி மாத, மூன்றாவது வெள்ளிக்கிழமையை ஒட்டி, ஈரோடு மாவட்டத்தில், அம்மன் கோவில்களில், சிறப்பு வழிபாடு, களை கட்டியது.
ஆடி வெள்ளிக்கிழமைகள், அம்மனுக்கு உகந்தவையாக கருதப்படுகிறது. இந்நிலையில், ஆடி மாத மூன்றாவது வெள்ளியான, அம்மன் கோவில்களில், மூலவர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஈரோடு பெரிய மாரியம்மன் தங்க கவச அலங்காரத்தில் அருள் பாலித்தார். கொங்காலம்மன், வீரப்பன்சத்திரம் மாரியம்மன், வலசு மாரியம்மன், நடுமாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் உள்ளிட்ட அனைத்து அம்மன் கோவில்களிலும், அபிஷேகம், அலங்காரம் மகா தீபாராதனை நடந்தது. கள்ளுக்கடை மேடு பத்ரகாளியம்மன், சிறப்பு மஞ்சள் காப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். கோவில் முன்புள்ள குண்டத்தில், பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர். கோவில் நண்பர்கள் குழு சார்பில், வடை, பாயாசத்துடன், அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், 3,000த்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
* பவானி செல்லியாண்டியம்மன் கோவில், வர்ணபுரம் சமயபுரம் மாரியம்மன் உள்ளிட்ட கோவில்களில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது.
* ஆடி வெள்ளியுடன், வரலட்சுமி நோன்பும் சேர்ந்து வந்தது. இதனால் அந்தியூர் தேர்வீதி காமாட்சியம்மன், 1,008 திருமாங்கல்ய அலங்காரம் செய்து, சிறப்பு பூஜை நடந்தது. இதேபோல், பத்ரகாளியம்மன் கோவிலிலும் பக்தர்கள் குவிந்தனர்.
*கோபி சாரதா மாரியம்மன் கோயிலில் காலை முதல் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அம்மனுக்கு வரலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டது. இதேபோல், பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில், 60 அடி குண்டத்துக்கு பெண்கள், விளக்கேற்றி வழிபட்டனர்.