Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிவ பூஜைக்கு உரிய புஷ்பங்கள்! மாங்கல்ய பலம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மங்களரூபன் மாருதிராயன்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஆக
2017
03:08

சங்கடங்கள் சூழும்போது, அவற்றைப் போக்கி, வாழ்வில் மங்கலங்களை அருள்பவன் மாருதி! அஞ்சனை மைந்தனாய் அவதரித்து, அன்னையின் துயர் துடைத்து, ராம பக்தனாய் அமர்ந்திருந்து அடியவரின் துன்பம் போக்கி, ராம பக்தர்க்கு என்றென்றும் நலம் புரிபவனாயிற்றே!

அன்பர்தம் உயிர் போகும் நேரத்தில் உடன் வந்து உயிர் காப்பவன் வாயு மைந்தன் என்பதை ராமாயணத்தின் பல இடங்களில் மகரிஷி வால்மீகி காட்டுகிறார். கணையாழியைக் கையிற் கொடுத்து, ராம நாமத்தாலே சீதையின் உயிர் காத்தவன் அனுமன்! பதிலுக்கு சீதையின் சூடாமணி ஆபரணம் அளித்து, ராமனின் தாபம் போக்கியவன் அனுமன்! சஞ்சீவி மலை கொணர்ந்து இளவல் இலக்குவனுக்கு உயிரளித்துக் காத்தவன் அனுமன்! அண்ணல் வரத்தாமதம் ஆனதனால் தன் இன்னுயிர் முடிக்கத் தீயில் இறங்கிய  பரதனைத் தடுத்து உயிர் காத்தவன் அனுமன்! சுக்ரீவனையும் வீடணனையும் ராமனிடம் சேர்ப்பித்து நட்புறவு கொள்ள வைத்து நலம் புரிந்தவனும் அனுமனே! இத்தனை மங்கலங்களும் ஒருங்கே பெற்ற அஞ்சனை மைந்தனை வால்மீகியும், கம்பனும், துளசிதாசரும், ஆழ்வார்களும் இன்னும் பல கவிகளும் சிறப்பித்துச் சொல்லுதற்போல், முருக பக்தராய் வலம் வந்த சந்தத் திலகம், அருணகிரிநாதரின் ஒரு பாடலும் ஒப்புயர்வற்றுச் சொல்கிறது.

மனிதன் என்றாலே ஆசாபாசங்கள் அதிகம் உள்ளவன்தான்! பாசத்திற் கட்டுண்டு கிடத்தலாலே பல காரியங்கள் ஆற்ற இயலாமற் போகிறதென்பர்! அனுமனோ, உலகியல் ஆசாபாசங்கள் எதுவுமற்றவன். கடக்கப்போகும் பெருங்கடலின் கரையில் நின்று கொண்டிருந்த அனுமன், எவ்வாறு அப்படித் துணிந்து கடலில் இறங்கி சாதனை புரிந்தனன் என்பதைச் சுந்தர காண்டம் சிறப்புறச் சொல்லும்!

சீதையைத் தேடி மேற்கு, கிழக்கு, வடக்கு என மூன்று திசைகளிலும் சென்ற வீரர்கள் வெறும் கையுடன் வந்துவிட்டனர். கவலையும் சோகமும் எல்லோரையும் தாக்குகின்றன. இனி, தெற்கு திசை ஒன்றே உள்ளது. அதில் அனுமனை அனுப்பினால் மட்டுமே காரியம் கைகூடும் என சுக்ரீவன் சொல்கிறான். இந்தக் குறிப்பை உணர்ந்த அனுமனும் தென் திசை செல்வதென்றும், திரும்பி வந்தால் பிராட்டியைப் பற்றிய செய்தியுடன் மட்டுமே வருவதென்றும் திடம் கொண்ட மனத்தினனாய் மலையின் மீது நிற்கிறான். மற்றவர் நன்மைக்காக தன்னையே பணயமாக வைப்பதென்பது, எப்படிப்பட் ட தூய தியாக குணம்.

அலைகள் ஆர்ப்பரிக்கும் கடல் முன் நிற்கிறான். இக்கடலை எப்படிக் கடப்போமென ஒரு சிறிதும் சிந்திக்கவில்லை! சீதாதேவி தென்திசையில்தான் இருப்பாரா என்றும் தெரியாது; அவர் எங்கே கிடைப்பார்? ஒருவேளை அவரைக் கண்டால் தன்னை எப்படி அடையாளம் காட்டுவது. அவருக்குத் தன்னை எப்படி அடையாளப்படுத்திக் கொள்வது? அதை விட முக்கியம், தான் கண்டது சீதாபிராட்டிதான் என ராமனுக்கு எப்படி நிரூபிப்பது என்றெல்லாம் அனுமன் யோசித்தானில்லை! தான் ஏதோ சாதிக்கப் போகிறோம் என்ற எண்ணமும் துளியும் அவனிடம் இல்லை! அவனிடம் இருந்ததெல்லாம் ராம பக்தி ஒன்றே! ராம காரியம் என்ற எண்ணம் மட்டுமே!

ஆனால், இவை எல்லாவற்றையும் எந்தவித சஞ்சலங்களுக்கும் ஆட்படாத மனத்துடன் செய்து முடிக்கிறான் அனுமன். பெருங்கடலைத் தாண்டி இலங்கை சென்று அரக்கரை அழித்து, பிராட்டியைக் கண்டு, திருவாழி மோதிரம் பெற்று, ராமனிடம் அளித்து, அனைத்து மங்கலங்களையும் நிச்சலன மனத்துடன் செய்து முடிக்கிறான்! அதில் அவனுக்கு மகிழ்ச்சி இல்லை! ஆனால், அனுமன் எப்போது மகிழ்ந்தான்? அன்னையின் சூடாமணி கண்டு முகம் மலர்ந்த ராமனின் மனம் அடைந்த மகிழ்ச்சியைக் கண்டு, அனுமனுக்கு எல்லையில்லா ஆனந்தம் நிறைந்தது!

சுந்தர காண்டத்தின் மையக் கருத்தே இந்த மங்கலங்களைச் செய்த மாருதியின் செயல்தானே! அதனால்தான் சுந்தர காண்டத்தைப் பாராயணம் செய்து மங்கலங்களை வாழ்வில் பெருக்கிக்கொள்ள வழி காட்டுகின்றனர் பெரியோர். இந்தக் காட்சியை அருணகிரிநாதர் தம் கதிர்காமத் திருப்புகழில் அழகாக அனுபவிக்கிறார். அந்தப் பாடல்...

உடுக்கத் துகில்வேணு நீள்பசி
அவிக்கக் கனபானம் வேணுநல்
ஒளிக்குப் புனலாடை வேணுமெய்... உறுநோயை
ஒழிக்கப் பரிகாரம் வேணுமுள்
இருக்கச் சிறுநாரி வேணுமொர்
படுக்கத் தனிவீடு வேணுமிவ்... வகையாவும்
கிடைத்துக் க்ருஹவாசி யாகிய
மயக்கக் கடலாடி நீடிய
கிளைக்குப் பரிபால னாயுயிர்... அவமேபோம்
க்ருபைச்சித் தமுஞான போதமும்
அழைத்துத் தரவேணு மூழ்பவ
கிரிக்குட் சுழல்வேனை யாளுவ.. தொருநாளே
குடக்குச் சிலதூதர் தேடுக
வடக்குச் சிலதூதர் நாடுக
குணக்குச் சிலதூதர் தேடுக... எனமேவிக்
குறிப்பிற் குறிகாணு மாருதி
யினித்தெற் கொருதூது போவது
குறிப்பிற் குறிபோன போதிலும்.. வரலாமோ
அடிக்குத் திரகார ராகிய
அரக்கர்க் கிளையாத தீரனு
மலைக்கப் புறமேவி மாதுறு.. வனமே சென்று
அருட்பொற் றிருவாழி மோதிரம்
அளித்துற் றவர்மேல் மனோகரம்
அளித்துக் கதிர்காம மேவிய...
பெருமாளே.

அருணகிரியார் அருளிய இந்தப் பாடலின் பொருளை மட்டும் இங்கே அனுபவிப்போம். இந்தப் பாடலை மனதூன்றிப் படித்தாலே அனுமனின் அனுக்கிரகம் மட்டுமல்ல. கந்தனின் கருணையும் சேர்ந்தே கிட்டும்.

உடுப்பதற்கு உடைகள் வேண்டும். பெரும்  பசியைத் தணிக்க உயர்ந்த சுவையான நீர் வேண்டும். தேகம் நல்ல ஒளிவீசும் பொருட்டு நீரும் பட்டாடையும் வேண்டும். உடல் நோயை அகற்ற மருந்துகள் வேண்டும். வீட்டுக்குள் இருக்க இளமையான மனைவி வேண்டும். படுத்துக்கொள்ள ஒரு தனி வீடும் வேண்டும். இத்தனை நலன்கள் யாவும் எனக்குக் கிடைக்கப்பெற்று, நானொரு குடும்பத்தனாகி, அந்த வாழ்வு என்று மயக்கக் கடலில் மூழ்கி, பெரிய சுற்றத்தார் கூட்டத்தைக் காப்பாற்றுபவனாகி, அதன் முடிவில் என்னுயிர் வீணாகக் கழிந்து விடும்.

கருணை உள்ளத்தையும் ஞானத்தையும் நீ என்னை அருகே அழைத்து வைத்துத் தந்தருள வேண்டும். ஊழ் வினையால் வரும் பிறவி என்ற மலைச் சூழலில் சுழலும் என்னை ஆட்கொள்ளும் நாள் ஒன்றும் உண்டோ?

மேற்குத் திசையில் சில தூதர்கள் தேடட்டும் என்றும், வடக்குத் திசையில் சில தூதர்கள் தேடட்டும் என்றும், கிழக்குத் திசையில் சில தூதர்கள் தேடட்டும் என்றும் அனுப்பி, குறிப்பினால் குறிப்பை உணரும் அனுமனை இனி, தெற்கு திசையில் தூதனாக அனுப்ப வேண்டியது என்று சொல்லி வைத்த குறிப்பின்படி, தேடும் பொருள் (சீதை) கிடைக்காமல் போனாலும் தோல்வியுடன் வரலாமோ? (வருதல் நன்றன்று என சுக்ரீவன் சொல்லி அனுப்ப), அடியோடு வஞ்சகர்களாகிய அரக்கர்களிடம் தோற்று இளைக்காத தீரனாகிய அனுமனும் அலை கடலைத் தாண்டி அப்புறம் உள்ள இலங்கைக்குச் சென்று, சீதாபிராட்டி  இருந்த அசோகவனத்தை அடைந்து, ராமபிரானது அழகிய பொன் மோதிரத்தை அன்னைக்கு அளித்து மீண்டு வந்த அந்த அனுமனுக்கு அனுக்கிரகத்தைத் தந்தருளி, கதிர்காமத்தில் வீற்றிருக்கும் பெருமாளே!

என்று கதிர்காமக் கந்தனைப் போற்றினார். அருணகிரியார். இலங்கை என்றால் அழகு. சுந்தரன் என்ற அனுமனும் அழகு! அழகிடத்தில் அழகனாய்ச் சென்று, அழகு மிகுந்த கைங்கரியத்தைச் செய்து, அண்ணலுக்கு அனுகூலம் புரிந்த அனுமன் புகழைச் சொல்லும் சுந்தர காண்ட பாராயணம் நம்மைக் கரையேற்றும் என்று முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். மருத் எனும் வாயுவின் புத்திரனாய்த் தோன்றிய அந்த மாருதி ராயன் நமக்கும் மங்கலங்களை எல்லாம் அள்ளி வழங்கப் பிரார்த்திப்போம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் பஞ்சபூதம் அல்லது பிரபஞ்சம் என்கிறோம். பிரபஞ்சம் என்றால் ... மேலும்
 
கண்ணப்ப நாயனார் சிவனுக்கு கண்கொடுத்த தலம் காளஹஸ்தி. இங்குள்ள சுவாமி காளத்திநாதர். இவரது கண்ணில் ... மேலும்
 
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகியால் ... மேலும்
 
விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் என அனைவரும் சிவபூஜை செய்து அருள் பெற்றுள்ளனர். ... மேலும்
 
‘பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா’ என்று சிவனைப் பாடினார் சுந்தரர். சுந்தரரின் முதல் பாடல் இது தான். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar