பதிவு செய்த நாள்
12
ஆக
2017
10:08
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நேர்த்திக்கடனாக செலுத்த வரும் பக்தர்களிடம், கால்நடைகளை தானமாக பெற்றுக்கொள்வது நிறுத்தப்பட்டுள்ளது; இது, பக்தர்களை பெரிதும் மன வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது. மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை, ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. வருட வருவாய், 18 கோடி ரூபாயைத் தாண்டி விட்டது. இதற்கேற்ப, இங்கு வரும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளையும், கோவிலின் கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த வேண்டுமென்பது, பொதுவான எதிர்பார்ப்பாகவுள்ளது. ஆனால், கோவில் நிர்வாகம் அதைச் செய்யாமல், காலம் காலமாக இருந்த பல்வேறு நடைமுறைகளை மாற்றம் செய்வதோடு, சிலவற்றை ரத்தும் செய்து வருகிறது.
சந்தையில் விற்க ஆலோசனை!இந்த வரிசையில், கோவிலுக்கு மாடு தானம் பெறுவது, சமீபத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. வீடுகளில் கால்நடைகளை வளர்த்து, அவற்றை கோவிலுக்கு நேர்த்திக்கடனாகவும், பரிகாரமாகவும் செலுத்துவது ஆண்டாண்டு காலமாகவுள்ள நடைமுறையாகும். திடீரென இவற்றை ஏற்க மறுக்கும் கோவில் நிர்வாகம், அதற்குப் பதிலாக மாடுகளை சந்தையில் விற்று, அந்தத் தொகையை கோவிலில் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளுமாறும் அல்லது உண்டியலில் போடுமாறும் அறிவுறுத்துகிறது.
மருதமலை கோவில் தேவஸ்தானத்தின் உத்தரவு இது என்று, கோவில் பணியாளர்கள் கூறுகின்றனர். இதனால், மருதமலைக்கு கொண்டு சென்ற கால்நடைகளை, மீண்டும் வீட்டுக்கும், சந்தைக்கும் எடுத்துச் செல்ல வேண்டிய சிரமத்துக்கு, பக்தர்கள் ஆளாகியுள்ளனர். இவ்வாறு, மாடு தானம் பெறுவதை நிறுத்துவது பற்றி, கோவில் நிர்வாகம் தெளிவான அறிவிப்பை வெளியிட்டு இருந்தால், பக்தர்கள் இது போன்ற இன்னல்களுக்கு ஆளாக நேரிடாது. மாடு தானம் பெறுவதை நிறுத்தியது குறித்து, கோவில் பணியாளர்கள் கூறியதாவது:
சுப்பிரமணிய சுவாமிக்கு நேர்த்திக்கடனாக வந்த ஏராளமான கால்நடைகள், கோவிலுக்கு சொந்தமான தோட்டத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தன. இப்போதும் அங்கு சில மாடுகள் உள்ளன. தானமாக பெறப்படும் கால்நடைகளில் பல, நோய் வாய்ப்பட்டுள்ளன; சில மாடுகள், உடல் உறுப்பு குறைபாடுகளுடன் இருக்கின்றன. இவற்றைப் பராமரிப்பதும், சிகிச்சை அளிப்பதும் பெரும் சிரமமாகவுள்ளது. மாடுகளுக்கு தேவையான தீவனமும் கிடைப்பதில்லை.
தேவஸ்தானம் முடிவாம்: மாடுகளுக்காக மாட்டுத்தொழுவம் அமைத்து, அவற்றைப் பராமரிக்கவும், சுத்தம் செய்யவும் சுழற்சி முறையில் பணியாளர் குழு ஏற்படுத்தப்பட்டிருந்தது. இவர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம், மாட்டுத்தீவன செலவு, மாடுகளிடமிருந்து பெறப்படும் பால் மூலம் கிடைக்கும் வருவாய் என்று வரவை விட, செலவு அதிகமாக இருந்தது. பராமரிப்பு சரியாக இல்லாததால் சில மாடுகள் இறந்தன. அதனால், மாடுகளை தானமாக பெறுவதை நிறுத்திக்கொள்ள தேவஸ்தானம் முடிவு செய்தது. கோவில் வசம் இருந்த சில மாடுகளைத்தவிர, மற்ற மாடுகள் அரசின் இலவச கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் இலவசமாக வழங்கப்பட்டுவிட்டது.சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் உள்ள கோவில் பூசாரிகளுக்கும், கோவில் சார்பில் வந்த கால்நடைகளை இலவசமாக அறநிலையத்துறை வழங்கி விட்டது. அதற்கு பின்பு, தானமாக வந்த கால்நடைகளை கோவில் நிர்வாகம் ஏற்றுக்கொள்ளவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.
பக்தர்கள் கூறுகையில், பசுவை காணிக்கையாகச் செலுத்துகிறோம் என்று இறைவனிடம் வேண்டுகிறோம்; வேண்டுதல் கேட்கப்பட்டதும், அதை நேர்த்திக்கடனாகச் செலுத்துகிறோம். ஆனால், மாடு வேண்டாம்; பணம் கொடுங்கள் என்பது கோவில் நிர்வாகம் சொன்னால், நாங்கள் இறைவனுக்கு எப்படி நேர்த்திக்கடன் செலுத்துவது என்று தெரியவில்லை. எதற்கெடுத்தாலும் காசு கொடுங்கள்; ரசீது கொடுக்கிறோம் என்று கோவில் நிர்வாகிகள் சொல்வது பெரும் மன வேதனையைத்தருகிறது, என்கின்றனர்.
இதே கோவையில், வெள்ளியங்கிரி கோசாலையில், இறைச்சிக்காகச் செல்லும்போது காப்பாற்றப்பட்ட மாடுகள், ஜல்லிக்கட்டு காளைகள் என இரண்டாயிரம் மாடுகள், தனியாரால் சிறப்பாகப் பராமரிக்கப்படுகின்றன. ஆண்டுக்கு 18 கோடி ரூபாய் வருவாய் வரும் ஒரு கோவில் நிர்வாகத்தால், பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களைக் கொண்ட அறநிலையத்துறையால், சில மாடுகளைக் கூடப் பராமரிக்க முடியவில்லை என்றால், அதற்குக் காரணம் இயலாமை இல்லை; பொறுப்பின்மை என்பது தான் நிஜம்.