பதிவு செய்த நாள்
12
ஆக
2017
11:08
அச்சிறுப்பாக்கம்: அச்சிறுப்பாக்கம் அடுத்த பெரும்பேர் கண்டிகையில், அக்னி வசந்த உற்சவத்தை முன்னிட்டு, துரியாயோதனன் படுகளம் கோலாகலமாக நடந்தேறியது. பெரும்பேர் கண்டிகை, கோவில்களுக்கு புகழ் பெற்ற திருத்தலம்; இந்த சிறிய கிராமத்தில் நுாற்றுக்கும் அதிகமான கோவில்கள் உள்ளன. இங்குள்ள, திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த உற்சவ விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. கடந்த இரு தினங்களாக, ஊரணி பொங்கல், அரவான் களபலி, உற்சவர் அபிஷேகம், மஹாபாரத சொற்பொழிவு போன்ற நிகழ்வுகள் நடந்தேறின. நேற்று காலை, துரியோதனன் படுகளம் கோலாகலமாக நடந்தேறியது. அதையடுத்து, பாஞ்சாலி, சபதம் நிறைவேற்றி கூந்தல் முடித்து, திருவீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அலகு நிறுத்தல், அக்னி பிரவேசம் எனும் தீமிதித் திருவிழா, மலர் மற்றம் மின் அலங்காரத்துடன் அம்மன் வீதியுலா நடைபெற்றது. இரவில், மஹாபாரத கூத்தும் நடைபெற்றது. அருகாமை பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.