பதிவு செய்த நாள்
12
ஆக
2017
05:08
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. முருகக் கடவுளின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழாவையொட்டி, அதிகாலை ஒரு மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
அதிகாலை 3 மணிக்கு வெள்ளி பல்லக்கில் கொடிபட்ட வீதி உலா வந்து கோயிலை சேர்ந்தது. அதிகாலை 5:00 மணிக்கு கோயில் இரண்டாவது பிரகார கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மேளதாளங்கள், பஞ்சவாத்தியங்கள் முழங்க கொடியேற்றம் நடந்தது. காலை 6.20 மணிக்கு கொடிமரத்திற்கு மகாதீபாராதனை நடந்தது. தொடர்ந்து தேவாரம், திருப்புகழ், வேதபாராயணம் முழங்கியது. பின்பு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழக செய்தி விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர்(பொறுப்பு) பரஞ்ஜோதி, உள்ளிட்டோர் பங்கேற்றனர். இத்திருவிழாவில் வரும் 18ம் தேதி சிகப்பு சாத்தி நிகழ்வும், 19ம் தேதி பச்சை சாத்தி நிகழ்வும் நடக்கின்றன. வரும் 21ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. வரும் 23ம் தேதியுடன் விழா நிறைவடைகிறது. விழா நாட்களில் கோயில் கலையரங்கில் பக்திசொற்பொழிவுகள், பக்தி இன்னிசை நிகழ்ச்சிகள் நடக்கிறது.