பதிவு செய்த நாள்
14
ஆக
2017
12:08
ஜெயின் மதத்தினரின் முக்கிய நோன்பான, ’சாதுர் மாஷ்’ நிகழ்ச்சியின் பிரதான விரத நாள், 19ம் தேதி துவங்குகிறது. இந்து மதத்தில், சாதுர் மாசிய விரதம் என்பது, மழைக்காலமான ஆடி மாத பௌர்ணமி முதல் கார்த்திகை மாத பௌர்ணமி வரையிலான நான்கு மாதங்கள், துறவிகள் ஒரே இடத்தில் தங்கி, வேத வேதாந்தங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்வர். இந்த மாதங்களில், துறவிகள் உணவு முறையில் சில கட்டுப்பாடுகளை வகுத்துக் கொள்வர்.
எட்டு நாட்கள்: இந்த விரதத்தை, சென்னை, பெரம்பூரில் உள்ள, எஸ்.எஸ்.ஜெயின் சங் சார்பில், ஜெயின் மதத்தினர் கடைபிடித்து வருகின்றனர்.இதில், ராஜஸ்தானைச் சேர்ந்த சம்கித் முனிஜி தலைமையில், தினமும் ஆன்மிக சொற்பொழிவு நடந்து வருகிறது. இதில், ஆக., 19 - 26 வரையிலான எட்டு நாட்கள், ஆன்மாவில் லயிக்கும் நிகழ்ச்சியாக கடைபிடிக்கப்படுகிறது.
அகிம்சை: இது குறித்து, ஜெயின் சங்கசெயலர் சேத்தன், பிரவீன் ஆகியோர் கூறியதாவது: சாதுர் மாசிய விரத காலத்தில், அகிம்சையை கடைபிடிப்பது முக்கியமாகும். இந்தாண்டு, ராஜஸ்தானில் இருந்து சம்கித் முனிஜி, நடைபயணமாக சென்னை வந்துள்ளார். இந்தகால கட்டத்தில் சிலர், உணவு உட்கொள்ளாமல் வெந்நீர் மட்டுமே குடித்து, அவரவரால் முடிந்த நாட்களுக்கு விரதமிருப்பர். வரும், 19 - 26 வரையிலான எட்டு நாட்கள், ’பிரஜியுஷன் பர்வ்’ எனப்படும், ஆன்மாவை சோதிக்கும் திருநாட்களாகும். இந்நாளில், தெரியாமல் செய்த தவறுக்கும்மன்னிப்பு கேட்பர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -