மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) - எதிர்பாராத வருமானம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஆக 2017 09:08
சனி பகவானை நட்பு கிரகமாக கொண்ட மிதுன ராசி அன்பர்களே!
இந்த மாதம் ஆக. 28- முதல் செவ்வாய் நன்மை தர காத்திருக்கிறார். சனி, சூரியன், சுக்கிரன் மாதம் முழுவதும் சாதகமாக நின்று நற்பலனை வாரி வழங்குவர். தற்போது குரு பகவான் உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் இருந்து குடும்பத்தில் பிரச்னையை உருவாக்கி இருப்பார். உறவினரிடையே வீண் விரோதம் வந்திருக்கும். கணவன், -மனைவி இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருக்கலாம். இந்நிலையில் செப்.2-ல் குரு பகவான் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்துக்கு செல்கிறார். இது மிகவும் சிறப்பான நிலை. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சி நடந்தேறும். பொருளாதார வளம் அதிகரிக்கும். பெண்களால் மேன்மை உண்டாகும்.
புதுமணத் தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குருவின் 5,7-ம் இடத்துப்பார்வைகள் சாதகமாக அமைவதால் மேலும் நன்மை அதிகரிக்கும். எந்த செயலையும் கச்சிதமாக செய்து முடிக்கும் வல்லமை பெறுவீர்கள்.
சமூகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். ஆக. 28-க்கு பிறகு மனதில் பக்தி எண்ணம் மேம்படும். புதனால் ஏற்பட்ட அவப்பெயர், செல்வாக்கு பாதிப்பு, வீண்கவலை முதலியன செப். 2-க்கு பிறகு மறையும்.
குடும்பத்தில் பெண்களால் பொன், பொருள் சேரும். விருந்து, விழா என அடிக்கடி சென்று வருவீர்கள். குறிப்பாக ஆக.18,19, செப். 14,15ல் பெண்களால் நன்மை அதிகரிக்கும். ஆக.22,23ல் புத்தாடை, அணிகலன் சேரும். செப்.10, 11-ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆக.24,25-ல் அவர்கள் வகையில் ஒதுங்கி இருப்பது நல்லது.
உடல்நிலை சீராவதால் மருத்துவச் செலவு குறையும். ஆக. 26,27,28, செப். 5,6- ல் மனக்குழப்பம் ஏற்படலாம், கவனம்.
தொழில், வியாபாரம் சூரியன் பலத்தால் நல்ல வளர்ச்சி பெறும். லாபம் உயர்வதால் கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். அரசு வகையில் தொல்லை குறுக்கிடலாம். எனவே வரவு செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். பகைவர்களால் இடையூறு வந்து மறையும்.
ஆக.29,30-ல் எதிர்பாராத வருமானம் கிடைக்கும். ஆக.17,20,21, செப். 12,13,16-ல் முயற்சியில் தடை ஏற்பட வாய்ப்புண்டு. சுக்கிரனால் ஆக. 21- க்கு பிறகு வியாபாரிகளுக்கு அரசு வகையில் நன்மை கிடைக்கும். சிலர் வங்கி கடன் மூலம் தொழிலை விரிவுபடுத்தலாம்.
பணியாளர்கள் குறிப்பாக தனியார் துறையினர் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். அதற்குரிய வருமானம் நிச்சயம் கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு பணியில் சற்று கவனம் தேவை. ஆக. 28- க்கு பிறகு சிலருக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. சக ஊழியர்கள்உதவிகரமாக இருப்பர். எதிர்பார்த்த கோரிக்கை நிறைவேறும். செப்.7,8,9-ல் பணியிடத்தில் உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும்.
கலைஞர்கள்- சிறப்பான நிலையில் இருப்பர். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவர். புகழ், பாராட்டு எதிர்பார்த்தபடி இருக்கும். ஆக. 21க்கு பிறகு அரசு விருது, பாராட்டு போன்றவை கிடைக்கும்.
அரசியல்வாதிகள் சீரான பலனை காண்பர். ஆக. 28 க்கு பிறகு புதிய பதவி தேடி வரும். மாணவர்கள்- புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் படிப்பில் கூடுதல் அக்கறை கொள்ள வேண்டியதிருக்கும். செப். 2க்கு பிறகு போட்டியில் பங்கேற்று வெற்றி காணலாம்.
விவசாயிகள்- எதிர்பார்த்த மகசூல் கிடைக்கப் பெறுவர். விளைபொருளை நல்ல விலைக்கு விற்று பலனடைவர். கால்நடை வகையில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். ஆக. 28-க்கு பிறகு புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். நிலத்தின் வகையில் இருந்த பிரச்னை மறையும். வழக்கு விவகாரத்தில் நல்ல முடிவு கிடைக்கும்.
பெண்கள்- கணவரின் அன்பும் அரவணைப்பும் கிடைக்கும். குடும்பத்தில் முக்கிய அங்கமாக திகழ்வீர்கள். ஆக.31, செப்.1,2-ல் எதிர்பார்ப்பு நிறைவேறும். பிறந்த வீட்டில் இருந்து சீதனம் கிடைக்கப் பெறலாம். ஆக. 28க்கு பிறகு குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். பெண்களை பங்குதாரராக கொண்ட வணிகம் சிறப்படையும்.