பதிவு செய்த நாள்
17
ஆக
2017
09:08
சூரியனை ஆட்சி நாயகனாக கொண்ட சிம்ம ராசி அன்பர்களே!
இம்மாதம் கேது சாதகமாக இருந்து நற்பலன் தர காத்திருக்கிறார். சுக்கிரன் நற்பலனை தரும் நிலையில் இருந்தாலும், ஆக. 21-ல் சாதகமற்ற நிலைக்கு மாறுகிறார். சந்திரனால் பெரும்பாலான நாட்கள் நன்மை உண்டாகும். மற்ற கிரகங்கள் சாதகமற்ற நிலையில் இருப்பதால் எதிலும் விடாமுயற்சி தேவைப்படும்.
குரு பகவான் உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் இருந்து பல்வேறு நன்மைகளை தந்து கொண்டு இருக்கிறார். உங்களை எதிர்த்தவர்கள் சரண் அடையும் நிலை ஏற்பட்டு இருக்கும். பகைவர்களின் எண்ணம் தவிடு பொடியாகி இருக்கும். மனதில் துணிச்சல் பிறக்கும். ஆற்றல் மேம்பட்டு இருக்கும். பொருளாதார வளம் சிறக்கும். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைத்திருக்கும்.
பணியாளர்கள் நிம்மதி உணர்வுடன் பணியாற்றி இருப்பர். சிலர் புதிய பதவி பெற்று இருப்பர். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடி இருக்கும். இந்நிலையில் குருபகவான், செப்.2ல் 3-ம் இடமான துலாம் ராசிக்கு செல்கிறார். இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. பொதுவாக குரு 3-ம் இடத்தில் இருக்கும்போது முயற்சியில் தடை ஏற்படும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காது. ஆனால் குருவின் பார்வை பலன்கள் சாதகமாக உள்ளன. குரு பார்வைக்கும் கோடி நன்மை உண்டு. எந்த இடையூறையும் அவரது சுபபார்வை போக்கி விடும்.
கேதுவால் அபார ஆற்றல் பிறக்கும். நகை-ஆபரணங்கள் வாங்கலாம். சிக்கனம் தேவை.
சுக்கிரனால் பணவரவு அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களின் வருகை அடிக்கடி இருக்கும்.
ஆக.22,23ல் பெண்களால் பொன், பொருள் சேரும். விருந்து விழா என அடிக்கடி செல்வீர்கள். செப்.2 க்கு பிறகு குடும்பத்தேவைகள் குறைவின்றி நிறைவேறும். ஆக.18,19, செப்.14,15-ல் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆக. 29,30ல் உறவினர் வகையில் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு. சற்று ஒதுங்கி இருக்கவும். புதனால் செப்.2க்கு பிறகு குடும்பத்தில் சில பிரச்னை குறுக்கிடலாம். கணவன்- மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை இருக்காது. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும்.
தொழில், வியாபாரத்தில் சீரான வளர்ச்சி உண்டாகும். கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். பகைவர்களின் தொல்லை அவ்வப்போது குறுக்கிடும்.
செப்.11,12,13ல் பெண்களால் நன்மை கிடைக்கும். ஆக. 18,19, செப். 9,10,14,15ல் தடைகள் குறுக்கிட்டு மறையும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாக நேரிடும். பணி விஷயமாக அடிக்கடி வெளியூர் பயணம் மேற்கொள்வர். அரசு ஊழியர்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறாமல் தள்ளிப் போகலாம். அதே நேரம் உங்கள் வேலைக்கு ஏற்ற மரியாதை கிடைக்கும். அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். ஆக.17, செப்.12,13- ல் எதிர்பாராத நன்மை உண்டாகும். செப்.2-க்கு பிறகு திடீர் இடமாற்றத்தைச் சந்திக்கலாம்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். புகழ், பாராட்டுக்கு குறைவிருக்காது. ஆக. 21க்கு பிறகு காரியத்தடை ஏற்படலாம். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பலனை பெற முடியாது. தொண்டர்களுக்காக பணம் செலவழிக்க நேரிடும்.
மாணவர்கள்- சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். ஆசிரியர்களின் அறிவுரையை கேட்டு நடப்பது நல்லது. விவசாயிகள்- தேவையான மகசூலை பெற முடியாவிட்டாலும் உழைப்புக்கு தகுந்த வருமானம் கிடைக்கும். கால்நடை வளர்ப்பின் மூலம் ஆதாயம் கிடைக்கும். வழக்கு, விவகாரத்தில் மெத்தனம் வேண்டாம்
பெண்கள்- மகிழ்ச்சியுடன் காணப்படுவர். குடும்பத்தாரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை காண்பர். ஆக. 26,27,28, செப்.16ல் ஆடை, ஆபரணம் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து சீதனப் பொருள் வரப் பெறலாம். செப். 5,6-ல் சகோதரிகளால் நன்மை ஏற்படும்.
செவ்வாயால் ஏற்பட்ட பித்தம், மயக்கம், பொருள் விரயம் முதலியன ஆக. 28- க்கு பிறகு மறையும்.
நல்ல நாள்: ஆக.17, 18, 19, 22, 23, 26, 27, 28,
செப். 3, 4, 5, 6, 12, 13, 14, 15
கவன நாள்: செப்.7, 8, 9- சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 6,7
நிறம்: வெள்ளை, சிவப்பு
பரிகாரம்
* சனிக்கிழமையில் நவக்கிரக வழிபாடு
* பிரதோஷத்தன்று நந்தீஸ்வரருக்கு விளக்கு
* திங்கட்கிழமை சிவனுக்கு அர்ச்சனை