சாணார்பட்டி, சாணார்பட்டியில் நடந்த கோயில் திருவிழாவில் புரவி எடுப்பு நடந்தது. சாணார்பட்டி மேட்டுக்கருப்பண சுவாமி கோயில் ஆண்டு உற்சவ விழா நடந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இதன் முக்கிய நிகழ்ச்சியான, புரவி எடுப்பதற்காக கருப்பண சுவாமி, குதிரை உள்ளிட்ட சிலைகள் தயாரிக்கும் பணி கடந்த ஒரு வாரமாக நடந்தது. விழாவின் துவக்கமாக நேற்று முன்தினம் இரவு கிராமிய இசை நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை கிராம தெய்வங்களுக்கு பழம் வைத்து சந்தனக்குடம் எடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து சுவாமி கண் திறப்பு மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை புரவி எடுத்து சிலைகள் ஊர்வலமாக கோயிலுக்கு சென்றது. இரவு ’வள்ளி திருமணம்’ எனும் புராண நாடகம் நடந்தது.