உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஆக 2017 11:08
ஆர்.எஸ்.மங்கலம், உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூரில் பிரசித்தி பெற்ற விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இந்த விநாயகர் மீது பகல் முழுவதும் சூரிய ஒளிபடுவதால் இந்த விநாயகர் வெயிலுகந்த விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.பத்து நாட்கள் நடைபெறும்
சதுர்த்தி விழாவின் தொடக்கமாக நேற்று காலை 9:50 மணிக்கு கோயில் அர்ச்சகர் ரவிகுமார் தலைமையில் கோயில் கொடிமரத்தில் விழா கொடியேற்றப்பட்டு, மூலவர் மற்றும் கொடிமரத்திற்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடைபெற்றன. அதைத் தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்தில் வீதி உலா வந்தார். விழாவின் தொடர்ச்சியாக ஆக.23 ல் விநாயகருக்கு திருக்கல்யாணமும், அதைத் தொடர்ந்து மறு நாள் தேரோட்டமும் நடைபெறுகின்றன. கடைசி நாளான ஆக. 25 ல் சதுர்த்தி தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெறுகின்றன. கொடியேற்ற விழாவில் முன்னாள் அமைச்சர் வ.து.நடராஜன், தேவஸ்தான செயல் அலுவலர் சந்திரசேகர், மாவட்ட வி.ஏ.ஓ., தலைவர் கிருஷ்ணன், கோயில் ஸ்தபதி அகிலன் உட்பட பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.