பதிவு செய்த நாள்
17
ஆக
2017
12:08
கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏர்வாடியில் அல்-குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இப்ராகீம் ஷஹீது பாதுஷா நாயகம் தர்கா உள்ளது. இங்கு 843ம் ஆண்டு சந்தனக் கூட்டிற்கான புகழ்மாலை ஜூலை 24ல் தொடங்கியது. ஆக., 2ல் அடிமரம் ஊன்றப்பட்டது. ஆக.,3 மாலையில் கொடி ஊர்வலமும், கொடியேற்ற நிகழ்ச்சியும் நடந்தது. ஆக.,15ல் மாலை 6:00 மணி முதல் அதிகாலை 3:00 மணி வரை பாதுஷா நாயகத்தின் புகழ்மாலை ஓதப்பட்டது. ஆக.,16 அதிகாலை 3:00 மணிக்கு, ஏர்வாடி நல்ல இப்ராஹிம் மஹாலில் இருந்து தாரை, தப்பட்டை, வாண வேடிக்கை முழங்க சந்தனக் குடத்தை தர்கா ஹக்தார்கள் கொண்டு வந்தனர். தொடர்ந்து 35 அடி கூடுதல் உயரத்துடன் சந்தனக்கூடு தேர் கொண்டு வரப்பட்டது. அதிகாலை 5:00 மணிக்கு பாதுஷா நாயகத்தின் அடக்கஸ்தலத்தில் சந்தனம் பூசப்பட்டு, வண்ணப் போர்வை, மல்லிகை சரத்துடன் போர்த்தப்பட்டது. ஆக.,23ல் கொடியிறக்கம் செய்யப்பட்டு, அன்னதானம் வழங்கப்படும். ஏற்பாடுகளை ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி கே.தேவதாஸ், ஆணைய உதவியாளர் எம்.கே.தமிழரசு மற்றும் ஏர்வாடி தர்கா ஹக்தார்கள் பொதுமகா சபையினர் செய்திருந்தனர்.