பதிவு செய்த நாள்
17
ஆக
2017
01:08
கெய்ரோ: எகிப்து நாட்டில், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய, மூன்று கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக, அந்த நாட்டு தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளுடன் வட கிழக்கு ஆப்ரிக்காவை இணைக்கும் நாடான எகிப்தில், பிரமிடு வடிவத்தில் அமைக்கப்பட்ட கல்லறைகள் புகழ்பெற்றவை. சமீபத்தில், நைல் நதி பள்ளத்தாக்கு மாகாணத்தில், மின்யா என்ற இடத்தில் நடந்த, தொல்லியல் ஆய்வில், இரண்டாயிரம் ஆண்ட் பழமையான மூன்று கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டன.இதுகுறித்து, எகிப்து தொல்லியல் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியில் கிடைத்த, பெரிய கல் சவப்பெட்டி மற்றும் களிமண் ஆகியவை, அந்த பகுதியில், மிகப் பெரிய இடுகாடு இருந்ததை உறுதிப்படுத்துகிறது. ஒரு கல்லறையில், இரண்டு ஆண்கள், இரண்டு பெண்களுக்கு என, நான்கு சவப்பெட்டிகளும், ஒரு குழந்தைக்கான சவப்பெட்டியும் இருந்தன. மற்றொரு கல்லறையில் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒவ்வொன்றிலும், ஒரு குழந்தை உட்பட ஆறு பேருக்கான சவப்பெட்டிகள் காணப்படுகின்றன. மூன்றாவது கல்லறை ஆய்வுப் பணிகள் நடந்து வருகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.