பதிவு செய்த நாள்
19
ஆக
2017
11:08
பழநி: ‘நாயன்மார்கள்’ சைவ மத சிவனடியார்கள். அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞான சம்பந்தர் உள்பட 63 பேர் உள்ளனர். பெரிய சைவ கோயில்கள் பலவற்றில் இவர்களின் சிலைகள் இருந்தாலும், பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் விசேஷ குருபூஜையே நடத்தப்படுகிறது.
இக்கோயிலில் 63 நயன்மார்களின் திருவுருவச்சிலைகள் அவர்களது பெயர், பிறந்த நட்சத்திரத்துடன் உள்ளன. திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோருக்கு ஆண்டுதோறும் அவர்களது பிறந்த நட்சத்திர நாளில் குருபூஜை விழாவே நடக்கிறது. ‘சிவனாடியாருக்கு செய்யும் தொண்டே சிவத்தொண்டு. இதன்மூலமே ஆண்டவனின் அருள் பெறலாம்’ என்கின்றனர். ஆக.,21ம் தேதி இறைவனுக்கு பொன்மீன் பரிசளித்த அதிபத்த நாயனார், சிவபூஜைக்கு செல்வம் முழுவதும் வழங்கிய புகழ்த்துறை நாயனார் பூஜை நடக்கிறது. வயலில் விதைத்த நெல்லை அரித்து சிவனடியாருக்கு உணவு தந்த இளையான்குடி மாறநாயனாருக்கு ஆக.,22ம் தேதி, பாண்டிய நாட்டில் சிவவழிபாட்டுக்கு புத்துயிர் அளித்த குலச்சிறை நாயனாருக்கு ஆக.,29, திருமாங்கல்யத்தை விற்று சிவபூஜைக்கு குங்குலியம் வாங்கி, சாய்ந்த சிவலிங்கத்தை நேராக்கிய குங்குலிய கலய நாயனாருக்கு ஆக.,31ம் தேதி, சிவபூஜைக்குரிய மலரை முகர்ந்து பார்த்தவரது மூக்கை அறுத்த செருத்துணை நாயனாருக்கு செப்.,16ம் தேதியும் குருபூஜை நடக்க உள்ளது. சிவனடியாரை தொழுத நாயன்மார்களை வணங்கினால் நாளும், கோளும் நம்மை எதுவும் செய்யாதாம். அப்புறம் என்னங்க, இதுபோன்ற நன்னாளில் பெரியநாயகியம்மன் கோயிலில் நாயன்மார்களை தரிசித்து சிவனருள் பெறலாமே.