பதிவு செய்த நாள்
19
ஆக
2017
11:08
வடமதுரை: வடமதுரை அருகே வெள்ளபொம்மன்பட்டியில் ‘பாம்பாலம்மன்’ கோயில் உள்ளது. நுாறு ஆண்டுகளுக்கு முன் புற்று அருகில் கிடந்த கற்சிலையை வணங்க துவங்கிய மக்கள், தற்போது அங்கு ஆண்டுதோறும் 3 நாள் திருவிழா நடத்தும் அளவு கோயிலாக மாற்றியுள்ளனர்.
வெள்ளபொம்மன்பட்டியில் வடமதுரை ரோட்டில் அமைந்துள்ள இக்கோயில் பூசாரி பி.செல்வம் கூறியதாவது: நுாறாண்டுக்கு முன் முழுக்க முழுக்க விவசாயம், அதனை சார்ந்த கால்நடை வளர்ப்பே இங்கு முக்கிய தொழிலாக இருந்தது. அப்போது ஆடு, மாடுகள் மேய்ச்சலுக்குச் சென்றால் தானாகவே வீடு திரும்பும் வகையில் அதனை வளர்ப்பர். இவ்வாறு செல்லும் ஆடுகள் காணாமல் போனால், இங்குள்ள புற்று சிலை முன்பாக வேண்டுதல் வைப்பர். அதன்பின் ஆடு, மாடுகள் வீடு திரும்பியதாக நம்பிக்கை, ஐதீகம் உள்ளது. இதன் பின்னரே மக்கள் அம்மனை வழிபட ஆர்வம் காட்டினர் எனச் செவிவழிச் செய்திகள் கூறுகின்றன. பாம்புகளால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, குழந்தை வரம் கிடைக்க, தொழில் வளம் சிறக்க என பல வேண்டுதல்களை வைக்கின்றனர். வேண்டுதல் நிறைவேறிய பின் வசதி படைத்த பக்தர்கள் தங்கள் பங்களிப்பை கோயிலுக்கு வழங்கினர்.
இதனால் சிறிய திட்டுபோல இருந்த கோயில் பதினைந்து ஆண்டுகளில் கட்டட வசதி கொண்ட ஒரு நடுத்தர கோயிலாக மாறிவிட்டது. நேர்த்திக்கடன் நிறைவேறிய பக்தர்கள், ஆடு, மாடு, குழந்தை மட்டுமின்றி, மினிபஸ், பாம்பு, ஆட்டோ, கார் என பல வகை பொம்மைகளை செய்து திருவிழாவில் ஊர்வலமாக கொண்டு வந்து கோயிலில் வைக்கின்றனர். இந்துக்கள் மட்டுமின்றி, பிற மதங்களை சார்ந்தவர்களும் வேண்டுதல் வழிபாடு செய்வது இக்கோயிலின் சிறப்பாகும், என்றார். கோயில் குறித்து விபரம் அறிய 97878 84298ல் அழைக்கலாம்.