போடி: தென்காசியம்பதி என போற்றப்படும் போடி அருகே விசுவாசபுரத்தில் இருந்து டொம்புச்சேரி செல்லும் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது பத்திரகாளியம்மன் கோயில்.
விசுவாசபுரத்தில் வசிக்கும் அனைத்து சமுதாய மக்களால் கட்டப்பட்ட 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. நுழைவு வாயில் தெற்கு நோக்கியும், அம்மன் கிழக்கு நோக்கி அமைந்திருப்பது இதன் சிறப்பம்சமாகும். கோயிலின் மூலஸ்தானத்தில் பத்திரகாளிஅம்மனும், முன்பகுதியின் எதிரே பைரவரும், வளாக வெளிப்பகுதியில் வலதுபுறத் தில் விநாயகரும், இடதுபுறம் சிவலிங்கமும் எதிரே நவக்கிரகங்களும் அமைந்துள்ளன. ஈசான மூலையில் நாகதேவதைக்கான புற்றும் உள்ளது. ஸ்தல விருட்சமாக வேப்ப மரம் அமைந்துள்ளது. பத்திரகாளி அம்மனை மனமுவந்து வணங்கி வேண்டுபவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கிறது. நோய்வாய்ப்பட்டவர்கள் வேண்டினால் நோய் தீர்கிறது. வேலை வாய்ப்பு, வாழ்க்கையில் மன நிம்மதி இல்லாதவர்களுக்கு மன அமைதியும் கிடைக்கிறது. சகல சவுபாக்கியங்களும் தந்து அம்மன் அருள்பாலிப்பதாக மக்கள் உணர்வுப் பூர்வமாக கூறுகின்றனர். மொத்தத்தில் வேண்டுவோருக்கு வேண்டும் வரம் கிடைக்கிறது என்பது ஐதீகம். தினமும் காலை 7:00 – 10:00 மணி வரையும், மாலை 5:00 – இரவு 7:00 மணி வரையும் கோயில் திறந்திருக்கும். இதில் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெறும். விழாக்காலங்களில்சிறப்பு அலங்காரம், பூஜை நடைபெறும்.மேல் விபரங்களுக்கு பூஜாரி பி.செந்தில் குமாரை 98423 70321 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.