பதிவு செய்த நாள்
19
ஆக
2017
11:08
நாட்றம்பள்ளி: நாட்றம்பள்ளி அருகே, கி.பி., 6ம் நுாற்றாண்டு காலத்து, நடுகல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. வேலுார் மாவட்டம், திருப்பத்துார், துாய நெஞ்சக் கல்லுாரி தமிழ்த்துறை பேராசிரியர்கள், பிரபு, சிவசந்திரன், ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டுள்ளனர். நாட்றம்பள்ளி சுற்று வட்டாரப் பகுதிகளில் நடந்த ஆராய்ச்சியில், காளை நடுகல் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து, பிரபு கூறியதாவது: தமிழர்களின் வரலாற்றிலும், வாழ்க்கையிலும், காளைகள் உறுதுணையாக இருந்துள்ளன. காளை இறந்தால், அதை, மனிதர்களை புதைக்கும் சுடு காட்டுக்கு அருகில் புதைத்து, ஒரு நடுகல் நட்டு, அதில் காளையின் கோட்டுருவம் வடிவமைத்து, அதற்கு, ஆண்டு தோறும் பொங்கலிட்டு, நம் முன்னோர்கள் வழிபட்டு வந்துள்ளனர். வேலுார் மாவட்டம், நாட்றம்பள்ளி தாலுகாவுக்குட்பட்ட, ஆத்துார் குப்பம் கொட்டாற்றங்கரையில், இது போன்ற நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கல்லின் பழமையை கணக்கிட்டால், கி.பி., 6ம் நுாற்றாண்டைச் சேர்ந்தது போல் தெரிகிறது. இக்கல்லில், காளை நீர் பருகுவது போல உருவம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது போன்ற கல்லை, இப்பகுதி மக்கள், மாட்டு தம்பிரான் கல் என அழைக்கின்றனர். தம்பிரான் என்ற சொல்லுக்கு தமிழில் தலைவன், அரசன், மன்னன், காவலன் என்ற பொருள் உண்டு. இந்த நடுகல் மற்றும் அதன் பழமையான வரலாறு, தமிழ் கற்கும் மாணவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் பேருதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.