பதிவு செய்த நாள்
19
ஆக
2017
12:08
காஞ்சிபுரம் : திருமலை, திருப்பதி தேவஸ்தான, இ-தரிசன முன்பதிவு மையத்தில், 50 ரூபாய், சர்வ தரிசன கட்டணத்தை, மீண்டும் துவக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். காஞ்சிபுரம், சாலைத்தெருவில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின், இ-தரிசன முன் பதிவு தகவல் மையம் இயங்குகிறது. இங்கு, 50 ரூபாய்க்கு, சர்வ தரிசன, முன்பதிவு செய்வது, கடந்த ஏப்ரல் மாதம் நிறுத்தப்பட்டது. தற்போது, 300 ரூபாய், சிறப்பு தரிசனம், கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, வசந்தோற்சவம், எஸ்.டி.சேவை தரிசனத்திற்கு மட்டும், முன்பதிவு செய்யப்படுகிறது. இதனால், 50 ரூபாய்க்கு முன்பதிவு செய்து, திருப்பதி வெங்கடேசப்பெருமாளை தரிசனம் செய்து வந்த பக்தர்கள், கூடுதலாக, 250 ரூபாய் செலுத்த வேண்டி உள்ளது. முன் போல, 50 ரூபாய், சர்வ தரிசன முன்பதிவை, மீண்டும் துவக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, மைய ஊழியர் ஒருவர் கூறுகையில், ’50 ரூபாய் முன்பதிவு இருந்த போது, தினமும், 400க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்தனர். ’தற்போது, 300 ரூபாய் முன்பதிவு மட்டும் உள்ளதால், 150க்கும் குறைவானவர்களே முன் பதிவு செய்கின்றனர்’ என்றார்.