உப்பூர் விநாயகருக்கு நாளை இருதேவியருடன் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஆக 2017 12:08
ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகருக்கு நாளை திருக்கல்யாணம் நடைபெறுவதால், விழா ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூரில் விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் மூலவர் மீது பகல் முழுவதும் சூரிய ஒளிபட்டு வருவதால் இந்த விநாயகர் வெயிலுகந்த விநாயகர் என்று அழைக்கப்படுகிறது. பத்து நாட்கள் நடைபெறும் சதுர்த்தி விழாவின் தொடக்கமாக ஆக.16 ல் கொடியேற்றத்துடன் சதுர்த்தி விழா துவங்கியது. அன்று முதல் தினமும் விநாயகர் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்நிலையில் சதுர்த்தி விழாவின் எட்டாம் நாள் விழாவான திருக்கல்யாண நிகழ்சி நாளை ஆக.23 மாலை 4:00 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் சித்தி, புத்தி ஆகிய இரு தேவியருடன் வெயிலுகந்த விநாயகருக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. விநாயகருக்கு வட மாநிலங்களில் மட்டுமே திருகல்யாணம் நடைபெறுவது வழக்கமாக உள்ள நிலையில், தமிழகத்தில் இரு தேவியருடன் இந்த விநாயகருக்கு மட்டுமே திருக்கல்யாணம் நடைபெறுவதால் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்ட பக்தர்களும் அதிகளவில் கலந்து கொள்வது வழக்கமான நிகழ்வாக உள்ளது. இதனால் கோயிலில் திருக்கல்யாண விழா ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.