பதிவு செய்த நாள்
22
ஆக
2017
04:08
செஞ்சி: தொடர் மழையிலும் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் வழக்கம் போல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நேற்று அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அன்று காலை அம்மனுக்கு விசேஷ அபிஷேகம், தங்க கவச அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. நேற்று இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் இருந்த அம்மனை கோவிலில் இருந்து வாத்தியங்கள் முழுங்க ஊஞ்சல் மண்டபத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு நடந்த ஊஞ்சல் உற்சவத்தின் போது கூடியிறுந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கற்பூரதீபம் ஏற்றி வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் சாமி வந்து ஆடினர்.
கோவில் பூசாரிகளும், பக்தர்களும் அம்மன் பக்தி பாடல்களையும், தாலாட்டு பாடல்களையும் பாடினர். இதில் விழுப்புரம் கலெக்டர் சுப்பிரமணியன், எஸ்.பி., ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்து சமய உதவி ஆணையர்கள் மேல்மலையனூர் பிரகாஷ், திருவண்ணாமலை மோகன் அறங்காவலர் குழு தலைவர் ரமேஷ், மற்றும் அறங்காவலர்கள் விழா ஏற்பாடுகளை செய்தனர். செஞ்சி டி. எஸ்.பி., ரவிச்சந்திரன் மற்றும் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் அரசு போக்கு வரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்களை இயக்கினர். மேல்மலையனூர் உட்பட விழுப்புரம் மாவட்டத்தில் பல இடங்களிலும் தொடர் மழை பொழிந்து வந்த நிலையிலும் வழக்கம் போல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர்.