பதிவு செய்த நாள்
23
ஆக
2017
06:08
அன்னூர்: மழை பெய்ய வேண்டி கோவை அருகே அரச மரத்துக்கும் வேப்ப மரத்துக்கும் கிராம மக்கள் திருமணம் செய்து வைத்தனர். தமிழகத்தில் பல மாவட்டங்களில் தென்மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. ஆனால், கோவை மாவட்டம், அன்னூர் வட்டாரத்தில் இருமுறை மட்டும் லேசான மழை பெய்தது. இதுவரை இந்த சீசனில் ஒரு முறைகூட கன மழை பெய்யவில்லை. குப்பேபாளையம், காட்டம்பட்டி பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. நிலத்தடி நீ்ர் மட்டம், 1,500 அடிக்கு கீழ் சென்று விட்டது. பயிர்கள் கருகி விட்டன. தீவனம் இல்லாமல், ஏராளமான விவசாயிகள் கறவை மாடுகளை விற்கின்றனர். இந்நிலையில், அரச மரத்துக்கும், வேப்ப மரத்துக்கும் திருமணம் செய்து வைத்தல் மழை பெய்யும் என ஊர் பெரியவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து ஊர் முக்கிய பிரமுகர்கள், 23ம் தேதி குப்பேபாளையம் மாரியம்மன் கோவில் அருகிலுள்ள அரச மரத்துக்கும், வேப்ப மரத்துக்கும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதற்காக வெற்றிலை பாக்கு தட்டுடன் ஊரில் அனைத்து வீடுகளுக்கும் சென்று அழைப்பு விடுத்தனர். நேற்று அரச, வேப்ப மரங்கள் முன் பந்தல் போடப்பட்டது. அரச மரத்துக்கு பட்டு வேட்டியும், வேப்ப மரத்துக்கு பட்டு சேலையும் கட்டப்பட்டது. ேஹாமம் வளர்த்தப்பட்டு, திருமணத்திற்கான மந்திரங்கள் ஓதப்பட்டன. ஆரத்தி எடுக்கப்பட்டது. பழங்கள், இனிப்பு உள்ளிட்ட சீர் வரிசைகள் வைக்கப்பட்டன. 200க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். மேளதாளம் முழங்க, ஒருவர் அரச மரத்துக்காக, வேப்ப மரத்துக்கு தாலி கட்டினார். ஊர் மக்கள் மொய் எழுதினர். அனைவருக்கும் விருந்து வழங்கப்பட்டது.