உப்பூர் வெயிலுகந்த விநாயகருக்கு இரு தேவியருடன் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஆக 2017 10:08
ஆர்.எஸ்.மங்கலம், ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகருக்கு சித்தி, புத்தி ஆகிய இரு தேவியருடன் நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூரில் பிரசித்திபெற்ற விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் கருவறையின் மேல் மேல் மண்டபம் அமைக்கப்பட்டுள்ள நிலையிலும் மூலவர் மீது பகல் முழுவதும் சூரிய ஒளி பட்டு வருவதால் இந்த விநாயகர் வெயிலுகந்த விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். இந்த கோயிலில் சதுர்த்தி விழா கடந்த ஆக.16 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் தினமும் விநாயகர் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தார். விழாவின் எட்டாம் நாளான நேற்று மாலை 5:10 மணிக்கு சித்தி, புத்தி ஆகிய இரு தேவியருடன் விநாயகருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. வட மாநிலங்களில் மட்டுமே விநாயகருக்கு திருக்கல்யாணம் நடைபெறும் நிலையில், தமிழகத்தில் இரு தேவியருடன் இந்த விநாயகருக்கு மட்டுமே திருக்கல்யாணம் நடைபெற்றதால் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விநாயகர் இரு தேவியருடன் குதிரை வாகனத்தில் வீதி உலா வந்தார். நாளை நடைபெறும் சதுர்த்தி தீர்த்தவாரியுடன் விழா நிறைவடைகிறது.