சதுர்த்தியன்று உலாவர காத்திருக்கும் பாகுபலி விநாயகர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஆக 2017 11:08
தேனி, தேனி மாவட்டத்தில் சதுர்த்தியையொட்டி இந்து எழுச்சி முன்னணி சார்பில் 101 இடங்கள், இந்து முன்னணி சார்பில் 50 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டு வருகின்றன. அன்னஞ்சி விலக்கு ஆதிநாராயணர் கோயில் வளாகத்தில் இந்து எழுச்சி முன்னணி சார்பில் 101 விநாயகர் சிலைகள் களிமண், கிழங்குமாவு, காகிதகூழ் மூலம் தயாரிக்கப்பட்டது. இப் பணிகள் விழுப்புரத்தை சேர்ந்த கணபதி ஸ்தபதி மேற் பார்வையில் கடந்த 2 வாரங்களாக நடந்துவந்தது. சில நாட்களுக்கு முன் அனைத்துப் பணிகளும் முடிவுற்று சிலைகளுக்கும் சிறப்பு பூஜை, பஜனை நடந்தது. பாகுபலி விநாயகர்: 101 விநாயகர் சிலைகளில் பாகுபலி விநாயகர், 5 அடி உயரத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் காமதேனு, மயில், சிங்க, அனுக்கிரஹ, உழவர் வாகனங்களில் அமர்ந்திருக்கும் விநாயகர் சிலைகள் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஊர்வலம்: இந்து எழுச்சி முன்னணி மாவட்டத் தலைவர் ராமராஜ் கூறியதாவது: நாளை காலை 9:00 மணிக்கு தேனி பெத்தாட்சி விநாயகர் கோயிலில் ராஜ விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜைகள் நடத்தப்படும். ஆக. 26 காலை 10:00 மணியளவில் பொம்மையகவுண்டன்பட்டி சாலைபிள்ளையார் கோயிலில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சிலைகள் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு அரண்மனைப்புதுார் முல்லை ஆற்றில் கரைக்கப்படும். ஊர்வலத்திற்கு 101 விநாயகர் சிலைகளுக்கு போலீசார் அனுமதி அளித்துள்ளனர், என்றார்.