பதிவு செய்த நாள்
29
ஆக
2017
12:08
கோத்தகிரி : கோத்தகிரியில் அகில பாரத அனுமன் சேனா இந்து மக்கள் கட்சி சார்பில், விநாயகர் விசர்ஜன ஊர்வலம் நடந்தது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, அகில பாரத அனுமன் சேனா சார்பில், கோத்தகிரி நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில், 72 சிலைகள் வைக்கப்பட்டன. பூஜிக்கப்பட்ட சிலைகள் அனைத்தும் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. கோத்தகிரி டானிங்டன் பகுதியில் துவங்கிய ஊர்வலத்தை, அகில பாரத அனுமன் சேனா இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் ஸ்ரீதரன் துவக்கி வைத்தார். மாநில தொழிற்சங்க பொது செயலாளர் மோகன்ராஜ் தலைமை வகித்தார். மாநில அமைப்பு செயலாளர் சரவணன், மாநில கொள்கை பரப்பு செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊர்வலமானது, டானிங்டன் சதுக்கத்தில் இருந்து புறப்பட்டு, காமராஜர் சதுக்கம், மார்க்கெட், பஸ் நிலையம், பஜார், காம்பாய் கடை, தாலுாக அலுவலம் சாலை மற்றும் ராம்சந்த் வழியாக, ஓம் காளி; ஜெய் காளி கோஷங்களுடன், மேள தாளங்கள் முழங்க கொண்டு செல்லப்பட்டன. பின்பு, உயிலட்டி நீர்வீழ்ச்சியில் விசர்ஜனம் செய்யப்பட்டன. முன்னதாக, டானிங்டன் பகுதியில், இந்துக்களின் எழுச்சி பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில், அனுமன் சேனா தேசிய நிர்வாகிகள் மற்றும் மாநில நிர்வாகிகள் பேசினர். இதில், சாலைகளை தேசியமயமாக்கும் அரசு, நதிகளை ஏன் தேசியமயமாக்க கூடாது என்ற முழக்கம் எழுப்பப்பட்டது.