பதிவு செய்த நாள்
04
செப்
2017
12:09
ஊத்துக்கோட்டை: பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம், 5.71 லட்சம் ரூபாய் இருந்தது என, கோவில் நிர்வாகம் தெரிவித்தது. ஊத்துக்கோட்டை அடுத்த, சுருட்டப்பள்ளி கிராமத்தில் உள்ளது, சர்வ மங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவில். பழமை வாய்ந்த இக்கோவிலில்,சிவபெருமான் உலகை காக்க வேண்டி ஆலகால விஷத்தை உண்ட மயக்கத்தில், அன்னை பார்வதி மடியில் தலைவைத்து படுத்து உறங்குவது போல் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இங்கு, சிவராத்திரி விழா, பிரதோஷம், அன்னாபிஷேகம் உள்ளிட்ட விழாக்கள் பிரசித்தி பெற்றது. மேலும், விடுமுறை நாட்களில் அதிகளவு பக்தர்கள் இங்கு குடும்பத்துடன் சென்று சுவாமியை தரிசனம் செய்வர். இவ்வாறு வரும் பக்தர்கள் காணிக்கையாக பணம் செலுத்த, கோவில் வளாகத்தில், 12 உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன. இதில் உள்ள பணம் எண்ணும் பணி நேற்றுமுன்தினம் நடந்தது. கோவில் மேலாளர் முனிசேகர் தலைமையில், சித்துார் மாவட்ட கோவில்களின் ஆய்வாளர் லதா முன்னிலையில், கோவில் ஊழியர்கள், பள்ளி மாணவர்கள், பக்தர்கள் உண்டியலில் உள்ள பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அதில், 5.71 லட்சம் ரூபாய் பணம் இருந்தது. இது, 40 நாட்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியது என, கோவில் நிர்வாகம் தெரிவித்தது.