பதிவு செய்த நாள்
05
செப்
2017
11:09
திருவனந்தபுரம்: கேரளாவில் நேற்று, வழக்கமான உற்சாகத்துடன், ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. மகாபலி சக்கரவர்த்தியின் செருக்கை அடக்க, வாமன அவதாரம் எடுத்த திருமாலை வணங்கியும், ஆண்டுக்கு ஒருமுறை, தன் மக்களை காண வர வேண்டும் என, வரம் வாங்கிய மகாபலியை வரவேற்றும், கேரளாவில், ஆண்டுதோறும், ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகை, அறுவடை திருநாளாகவும் போற்றப்படுகிறது. கேரளாவில், ஓணம் பண்டிகை நேற்று, வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. மக்கள், அதிகாலையில் எழுந்து, அத்தப்பூ கோலமிட்டு, கோவில்களில் வழிபட்டனர். திருவனந்தபுரம், பத்மநாப சுவாமி கோவில், சபரிமலை அய்யப்பன் கோவில், குருவாயூர் கிருஷ்ணன் கோவில் உள்ளிட்ட முக்கிய கோவில்களில், மக்கள் கூட்டம் அலை மோதியது. விதவிதமாக உணவு சமைத்து, நண்பர்களுக்கு விருந்து அளித்து மக்கள் மகிழ்ந்தனர். பல பகுதிகளில், கலை நிகழ்ச்சி களும் நடந்தன. திருவனந்தபுரத்தில், நேற்று முன்தினம் இரவு முதல், கலை நிகழ்ச்சிகள் களை கட்டியுள்ளன; நடிகை மஞ்சு வாரியர் பங்கேற்ற நடன நிகழ்ச்சியை, ஏராளமானோர் கண்டு களித்தனர். ஒரு வாரம், இந்த கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.