பதிவு செய்த நாள்
05
செப்
2017
11:09
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் முடங்கிக் கிடக்கும் தங்கத் தேருக்கு பதிலாக, புதிய தங்கத் தேர் உருவாக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர். 2001ல்ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 14 கிலோ தங்கத்தில், 18.5 அடி உயரத்தில் தங்கத் தேரை இந்து சமய அறநிலையத் துறையினர் உருவாக்கினர். ரூ.2 ஆயிரம் நன்கொடை செலுத்தி, கோயில் மூன்றாம் பிரகாரத்தில் இந்த தேரை பக்தர்கள் இழுத்து நேர்த்திக் கடன் செலுத்தி வந்தனர். துவக்கத்தில் தங்கத் தேரை பராமரித்த கோயில் நிர்வாகம், காலப்போக்கில் கண்டுகொள்ளாமல்விட்டதால் தேரின் சக்கரம் சேதமடைந்து இயங்காமல் போனது.
தங்கம் மாயம் : 16 ஆண்டுகளுக்கு முன் தங்கத் தேரில் பொருத்தியதாக கூறப்பட்ட 14 கிலோ தங்கத்தில், தற்போது ஒரு சில கிலோ எடை குறைந்து விட்டதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்து பொறுப்பேற்ற கோயில் அதிகாரிகள் சேதமடைந்த தங்கத் தேரை பழுது நீக்கி மீண்டும் இயக்க முன்வராமல், ஒதுங்கி கொண்டனர். இதனால் 10 ஆண்டுகளுக்கு மேலாக தங்கத்தேர் பயன்பாடின்றி கோயில் மூன்றாம் பிரகாரத்தில் முடங்கி கிடக்கிறது. சேதமடைந்த தேரில் உள்ள தங்கத்தின் எடை குறைவு குறித்து ஆய்வு செய்து, சிறிய அளவில் புதிய தங்கத் தேரை உருவாக்கி இயக்க, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.
கோயில் அலுவலர் ஒருவர் கூறியதாவது: தற்போதைய தங்கத் தேர் பெரியதாக உள்ளதால், பழுது நீக்கி இயக்கினாலும் சிக்கல் ஏற்படும். உயர் அதிகாரி உத்தரவிட்டால் புதிய தங்கத் தேர் உருவாக்க வாய்ப்பு உள்ளது. சேதமடைந்த தேரில், ஒரு சதவீதம் கூட தங்கத்தின் எடை குறைய வாய்ப்பு இல்லை என்றார்.