பதிவு செய்த நாள்
12
செப்
2017
01:09
பவானி: பவானியில் நடக்கும், காவிரி மஹா புஷ்கர விழாவுக்கு, முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. 144 ஆண்டுகளுக்குப் பின் நடக்கும், காவிரி மஹா புஷ்கர விழா, பவானி, கூடுதுறை காவிரி ஆற்றில், வரும், 20 முதல், 24 தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், கூடுதுறை கோவில் மண்டபத்தில் நேற்று மாலை நடந்தது. கோபி ஆர்.டி.ஓ., கோவிந்தராஜ் தலைமை வகித்தார். பவானி தாசில்தார் குணசேகரன், டி.எஸ்.பி., ஜானகிராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சங்கமேஸ்வரர் கோவில் நிர்வாகத்தினர், மின்சாரம், பொதுப்பணி, தீயணைப்பு துறையினர், நகராட்சி அதிகாரிகள், பவானி போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார், விழா குழுவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள், முக்கிய பிரமுகர்கள், துறவியர்கள் பங்கேற்பர். இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதி, சுகாதாரம், பாதுகாப்பு, போக்குவரத்து வசதிகள் குறித்து, ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அதிகாரிகள் அனைவரும், காவிரி ஆற்று பகுதியில், புஷ்கர விழாவை ஒட்டி நடந்து வரும் பணிகளை பார்வையிட்டனர்.