மதுரை: மதுரை கூடலழகர் கோயிலில் நவராத்திரி கலை விழா, புரட்டாசி சனி வார விழா, ஐந்து கருட சேவை விழா ஏற்பாடுகள் நடக்கிறது. கோயில் செயல் அலுவலர் தி.அனிதா கூறியதாவது: இக்கோயில் பெரியாழ்வாரால் திருப்பல்லாண்டு பாடப்பெற்றது. 108 திவ்ய தேசங்களில் சிறப்புமிக்க 47வது திவ்யதலம். நவராத்திரி உற்சவம் செப்.21ல் துவங்கி செப்.29வரை நடக்கிறது. விழாவை முன்னிட்டு மதுர வள்ளித் தாயார் தினமும் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பார். நவராத்திரி கொலு அலங்காரம், கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. புரட்டாசி மாதத்தில் செப்.23,30, அக்.7,14, ஆகிய சனி வாரங்களில் பெருமாள், ஆண்டாள், தாயார் புஷ்பங்கி சேவை சாத்தி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். புரட்டாசி பவுர்ணமியான அக்.5ல் தாயார் சன்னதியில் காலை பாலாபிஷேகம், இரவு 7:00 மணிக்கு ஐந்து கருட சேவை நடக்கிறது என்றார்.