பதிவு செய்த நாள்
13
செப்
2017
10:09
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில், காவிரி மகா புஷ்கரம் விழா, நேற்று கோலாகலமாக துவங்கியது. காவிரி மகா புஷ்கரம் என்பது, குரு பகவான், கன்னி ராசியில் இருந்து, காவிரி நதிக்கு உரிய துலாம் ராசிக்கு மாறும், குரு பெயர்ச்சி காலத்தில் கொண்டாடப்படும் விழாவாகும். புஷ்கர விழா காலத்தில் காவிரியில் நீராடுவதால் பிதுர் தோஷம், பிரம்மஹத்தி தோஷம் உள்ளிட்ட பல்வேறு தோஷங்கள் நீங்கி, பஞ்சம் அகன்று, உலகம் சுபிட்சம் பெறும் என்பது ஐதீகம்.
காவிரி மகா புஷ்கரம் விழா, 12 குருப் பெயர்ச்சிகளை கடந்து, 144 ஆண்டுகளுக்குப் பின் கொண்டாடப்படுகிறது. மயிலாடுதுறையில், காவிரி மகா புஷ்கரம் விழா நேற்று துவங்கியது. நேற்று அதிகாலை, பேரூர் இளைய ஆதினம் மருதாச்சல அடிகளார், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், புஷ்கர கமிட்டி தலைவர் சுவாமி ராமானந்த மகராஜ், சுவாமி வேதானந்தா மற்றும் ஏராளமான துறவிகளும், பக்தர்களும் காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடினர். காவிரியின் தென் கரையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள காவிரி தாய்க்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. பூஜைகள், வேத சிவ ஆகம பாடசாலை முதல்வர் சாமிநாத சிவாச்சாரியார் தலைமையில் நடந்தது.மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியின் இரு கரைகளிலும், கடங்களில் புனிதநீர் ஆவாகனம் செய்யப்பட்டு, சிறப்பு ஹோமங்கள் நடந்தன.
திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான, அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமி, அறம் வளர்த்த நாயகி சமேத அய்யாறப்பர் சுவாமி, தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஞானாம்பிகை சமேத வதானேஸ்வரர், விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர் ஆகிய சுவாமிகள், காவிரி துலாக் கட்டத்தில், காலை, 8:00 மணிக்கு எழுந்தருளினர். காவிரி தென் கரையில் காவிரித்தாய் சிலை அருகே அமைக்கப்பட்டிருந்த கொடிக் கம்பத்தில், புஷ்கர விழா கொடியை, திருவாவடுதுறை ஆதீனம், 24வது குருமகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ஏற்றினார். காஞ்சி சங்கராச்சாரியார்கள் முன்னிலையில், சிறப்பு ஹோமத்தில் ஆவாகனம் செய்யப்பட்ட புனித நீர், காவிரியில் விடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
தொடர்ந்து, காஞ்சி சங்கராச்சாரியார்கள் உட்பட பல்வேறு ஆதினங்கள் மற்றும் மடாதிபதிகள், ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவிரியில் புனித நீராடினர். உற்சவத்தில், கிரீஸ் நாட்டு இளவரசி ஐரின் கலந்து கொண்டு, தரிசனம் செய்தார்.மயிலாடுதுறையில், 24ம் தேதி வரை, காவிரி மகா புஷ்கரம் விழா நடக்கிறது. இந்த 12 நாட்களில் காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடினால், அனைத்து புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடிய பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
சிறப்பு தபால் உறை: திருச்சி ஸ்ரீரங்கத்தில் நேற்று காலை 7:00 மணிக்கு செண்பக மன்னார் செண்டலங்கார ஜீயர், ஸ்ரீவில்லிபுத்துார் சடகோப ராமானுஜ ஜீயர் ஆகியோர் பட்டாச்சார்யார்களுடன் அம்மா மண்டபம் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடினர். அங்கிருந்து வெள்ளிக் கலசங்களில் புனித நீர் எடுத்து யாக சாலைக்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து கோ பூஜை நடத்தி யாகசாலை முன் கருட கொடியேற்றப்பட்டது. ஸ்டேட் வங்கி சார்பில், மகா புஷ்கர விழா சிறப்பு தபால் உறை வெளியிடப்பட்டது. அதிகாலை, 5:00 மணியில் இருந்தே, ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீரங்கம் காவிரியில் புனித நீராடி, ரெங்கநாதரை தரிசித்து சென்றனர். திருவையாறு புஷ்ப மண்டப படித்துறையில், கோபூஜை, கஜ பூஜை நடந்தது. காவிரியில் நீர் இல்லாததால், பக்தர்கள் புனித நீராட முடியமால் சிரமப்பட்டனர்.