பதிவு செய்த நாள்
13
செப்
2017
11:09
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த மாகரல் கிராமத்தில், தேவையான அடிப்படை வசதிகள் உள்ளதாகவும், ஊருக்கு பெருமை சேர்க்க, மாகறலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது என, அவ்வூர் மக்கள் பெருமிதம் தெரிவிக்கின்றனர். காஞ்சிபுரம் அடுத்த மாகரல் கிராமத்தில், 4,00-0 மக்கள் வசிக்கின்றனர். காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில் அமைந்துள்ள இந்த ஊருக்கு அருகில் ஓடும் செய்யாறு, அந்த கிராமத்து மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது. விவசாயம் பிரதான தொழிலாக இருக்கிறது.மழை காலத்தில், ஏரியில் தண்ணீர் இருக்கும் போது, விவசாயம் செய்யும் வசதி உள்ளது. தற்போது ஆழ்துளை கிணற்று பாசனம் மூலம் விவசாயம் செய்கின்றனர். தவிர, பிற ஊர்களின் நிறுவனங்களில் பலர் வேலைக்கு செல்கின்றனர்.
போக்குவரத்து வசதி போதுமான அளவில் உள்ளது. சின்ன கிராமமாக இருந்தாலும், இந்தியன் வங்கி, வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், கால்நடை மருத்துவமனை, நடுநிலை பள்ளி, இ-சேவை மையம், மின் அலுவலகம் போன்ற வசதிகள் உள்ளன. சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் பாதுகாக்க, காவல் நிலையமும் உள்ளது. இங்குள்ள, மாகறலீஸ்வரர், சிவன் கோவிலில், மாசி மாதம் பிரம்மோற்சவம் நடைபெறும், 10 நாள் திருவிழா சிறப்பாக இருக்கும். பல்வேறு ஊர்களில் இருந்து, இந்த கோவிலுக்கு மக்கள் வருவர். அது போல, பெருமாள் கோவில் விழாக்களும், விமரிசையாக நடைபெறும். சின்ன கிராமமாக இருந்தாலும் மாகறலீஸ்வரர் கோவில், ஊருக்கு பெருமை சேர்க்கிறது. வெளியூர்களுக்கு மக்கள் வேலைக்கு செல்லவும், மாணவர்கள் பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்லவும் பஸ் வசதி உள்ளது. இதனால், மக்கள் வாழ்வதற்கு ஏற்ற ஊராக அமைந்துள்ளது. காலை, மாலையில் கூட்டம் அதிமாக இருக்கிறது. அப்போது, கூடுதல் பஸ் இயக்கினால் இன்னும் வசதியாக இருக்கும்.
என்.சண்முகம், மாகரல்
திருஞானசம்பந்தர் பாடிய தலம்: ஒவ்வொரு ஊருக்கும் பெருமை சேர்க்க சிறப்புகள் இருக்கும். அந்த வகையில், இந்த கிராமத்தில் பழமையான, சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட மாகறலீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். பொன்னிறமான உடும்பை பிடிக்க மன்னன் முற்படும் போது, பாதி பூமிக்குள்ளும் பாதி வெளியில் தெரிந்த நிலையில் இருந்ததாகவும், அந்த இடத்தில் கோவில் கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. உடும்பின் பின் பகுதியே லிங்கமாக காட்சியளிக்கிறது. சைவ குறவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தரால் பாடல் பாடப் பெற்ற தலமாக விளங்குகிறது. அதே போல் அந்த கிராமத்தில் வீற்றிருந்த பெருமாள் கோவில் உள்ளது.